‘நீட்’ முறைகேடு – அவலம் டில்லி பிஜேபி அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூன் 22- மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்காக நாடு முழுவதும் மாணவர்களுக்கு நீட் என்னும் தகுதித் தேர்வு நடத்தப்ப டுகிறது.
நீட்தேர்வு முறைகேடு

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அப்போது அதில் ஒரே பயிற்சி மய்யத்தில் படித்த மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று இருந்ததும், சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்ப ட்டிருந்ததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இது தவிர தேர்வின்போதே வினாத்தாள் கசிந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதனை மத்திய தேர்வு முகமை மறுத்து வந்தது. இருந்தபோதும் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதாகவும் நீதிமன்றத்தில் மத்திய தேர்வு முகமையும், ஒன்றிய அரசும் தெரிவித்தன. இதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டன. இதனிடையே நீட் முறைகேடு தொடர்பாக பீகார் உள் ளிட்ட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டனர்.

பா.ஜனதா அலுவலகத்தை காங்கிரஸ் முற்றுகை
இந்தநிலையில் நீட்தேர்வு முறைகேட்டை கண்டித்தும், மீண்டும் நீட் தேர்வு நடத்தக் கோரியும் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டது.

அதன்படி டில்லியில் உள்ள பா.ஜனதா அலுவலகம் அருகே, டில்லி காங்கிரஸ் கட்சியினர் நேற்று (21.6.2024) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு டில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரபிரதேசம்

இதேபோல் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அஜய்ராய் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அஜய் ராய், நீட் போன்ற மதிப்பு மிக்க தேர்வை நியாயமான முறையில் நடத்த ஒன்றிய அரசு தவறிவிட்டது. இதற்கு ஒன்றிய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், நீட் தேர்வுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை எழுப்பியும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தினர்.அவர்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணி செல்ல முயன்றபோது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்துக்கு மாநில தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் இந்த பிரச்சினைக்காக சாலை முதல் நாடாளுமன்றம் வரை போராடும் என்றார்.

மத்தியபிரதேச மாநிலம்

போபாலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேனாள் முதலமைச்சர் திக்விஜய்சிங் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் மும்பை, சண்டிகார், நாகாலாந்து உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *