எதிர்கட்சிக்கு வாகளித்தவர்கள் என்னிடம் வரவேண்டாம் நான் உதவமாட்டேன் என்று கூறிய பீகார் பாஜக கூட்டணி உறுப்பினர் மீது வழக்கு

Viduthalai
1 Min Read

பாட்னா, ஜூன் 21- மக்களவைத் தோ்தலில் தனது கட்சிக்கு வாக்களிக்காமல் எதிர்க்கட்சியினருக்கு வாக்களித்த சமூகத்தினருக்கு உதவப் போவதில்லை என்று அய்க்கிய ஜனதா தள எம்.பி. தேவேஷ் சந்திர தாக்குா் கூறிய நிலையில், அவருக்கு எதிராக பீகார் நீதிமன்றத்தில் நேற்று (20.6.2024) புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
18-ஆவது மக்களவைத் தோ்தலில் பீகாரில் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது.

தோ்தலில் வெற்றிபெற்ற அய்க்கிய ஜனதா தள மக்களவை உறுப்பினர் தேவேஷ் சந்திர தாக்குா், தனது கட்சிக்கு வாக்களிக்காமல் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு வாக்களித்த குஷ்வாஹா, யாதவ சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றப் போவதில்லை என்று அண்மையில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல தனக்கு வாக்களிக்காத முஸ்லிம்களுக்கும் உதவப் போவதில்லை என்றும் அவா் கூறியதாக தெரிகிறது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் உள்ள தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தேவேஷ் சந்திர தாக்குருக்கு எதிராக திலீப் குமார் குஷ்வாஹா என்பவர் நேற்று (20.6.2024) புகார் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு தொடா்பாக திலீப்பின் வழக்குரைஞா் ஹரி ஓம் குமார் செய்தியாளா்களிடம் கூறுகையில்,
‘தேவேஷின் பேச்சு குஷ்வாஹா, முஸ்லிம் மற்றும் யாதவ சமூகத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ளது. எனவே அவா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 501, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மனுவில் கோரப்பட்டுள்ளது. ஜூலை 2-ஆம் தேதி மனு மீது நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *