நடந்த தவறுகளுக்கு அரசும் தேசிய தேர்வு முகமையும்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூன் 19- நீட் தேர்வில் 0.001% அலட்சியம் இருந்தால்கூட அதை ஒப்புக் கொண்டு அதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பாக மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.பாட்டி அடங்கிய விடுமுறைக் கால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு மற்றும் என்டிஏ சார்பில் வழக்குரைஞர்கள் ஆஜராகினர்.
அப்போது நீதிபதிகள் கூறிய தாவது: நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகளை நடத்துவதில் 0.001% அலட்சியத்தைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. இதை ஒன்றிய அரசும், தேசிய தேர்வு முகமையும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். தவறு நடந்திருந்தால், ‘ஆம் தவறு இருக்கிறது’ என்பதை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டு, ‘நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை இதுதான்’ என்பதை தைரியமாக தெரிவிக்க வேண்டும். அதுதான் குறைந்தபட்சம் உங்கள் செயல்திறனில் நம்பிக்கையை தூண்டும்.
நுழைவுத் தேர்வில் தவறு நடந்திருந்தால், அதை வெளிப்படை தன்மையுடன் ஒப்புக்கொண்டு, அதுகுறித்து முழுமையான விசாரணை நடத் தப்பட ஒத்துழைக்க வேண்டும்.
நீட் தேர்வு மீதான மாண வர்களின் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. நீட் தேர்வர்கள், கல்வியாளர்கள் தாக்கல் செய்யும் மனுக்களை ஒன்றிய அரசும், தேர்வு முக மையும் விரோதப் போக்குடன் பார்க்க கூடாது. இந்த சமூகத்தில் ஒருவர் மோசடி செய்து மருத்துவரானால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அது, சமூகத்துக்கு பெரும் தீங்கு களை விளைவிக்கும்.
நீட் போன்ற பெரிய தேர்வுகளுக்கு தயாராகும் லட் சக்கணக்கான குழந்தைகளின் உழைப்பையும், நேர்மையான முயற்சிகளையும் யாரும் மறக்க கூடாது. இதுபோன்ற மோசடிகள் அவர்களது உண்மையான லட்சியங்களை முறியடித்துவிடும்.
என்ன தவறு நடந்துள்ளது என்பதை, நேர்மையான விசாரணை மூலமாக மட்டுமே கண்டறிய முடியும். நீட் முறை கேடு வழக்கில் ஒன்றிய அரசு, தேசிய தேர்வு முகமை 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும். அதற்கான நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.
மேலும், தேர்வை புதிதாக நடத்த உத்தரவிடக் கோரியது உட்பட நீட் தேர்வின் பல்வேறு குளறுபடிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
ராகுல் காந்தி குற்றச்சாட்டு:
இதற்கிடையே, பிரதமர் மோடி வழக்கம்போல நீட் பிரச்சினையிலும் மவுனம் சாதித்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: நீட் தேர்வு முறைகேடுகளால்24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆனாலும்கூட, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி வழக்கம்போல மவுனம் சாதிக்கிறார். நீட் தேர்வு செயல் பாட்டில் திட்டமிட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஊழல் நடந்துள்ளது என்பதை, பிகார், குஜராத், ஹரியாணாவில் நடந்த கைது நடவடிக்கைகள் தெள்ளத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பாஜக ஆளும் மாநிலங்கள்தான் வினாத்தாள் கசிவின் மய்யமாக இருந்துள்ளன. இவ்வாறு ராகுல் பதிவிட்டுள்ளார்.