புதுடில்லி, ஜூன் 18 நீட்’ தோ்வு குளறுபடி விவகாரம் தொடா்பாக ஒன்றிய அரசைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று (ஜூன் 18) ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை நாடாளுமன்ற சந்தீப் பதக் நேற்று (17.6.2024) தெரிவித்தார். மேலும், இதே விவகாரம் தொடா்பாக ஒன்றிய அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி 19.6.2024 அன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தும் என்றும் பதக் கூறினார்.
இது தொடா்பாக சந்தீப் பதக் எக்ஸ் ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளாா். அதில், ‘நீட் தோ்வில் பல குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. லட்சக்கணக்கான குழந்தைகளின் கடின உழைப்பு மற்றும் கனவுகளுக்கு மோடி அரசின் இத்தகைய மோசடிகளை நாடு பொறுத்துக் கொள்ளாது. இந்த ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி போராட்டம் நடத்தும். இன்று காலை 10 மணிக்கு, ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலா்கள் ஜந்தா் மந்தரில் திரண்டு ஒன்றிய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்துவா். மேலும், ஜூன் 19-ஆம் தேதி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி போராட்டம் நடத்தும் என ஒரு இடுகையில் அவா் கூறியுள்ளார்.
‘நீட்’ தேர்வில் இரண்டு வகையான மோசடிகள்
புவனேஸ்வரம், ஜூன் 18- நீட் தேர்வு மோசடிகளை அரசு இதுவரை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாத நிலையில், தற்போது 2 விதமான முறைகேடுகள் நடந்திருப்பதாக ஒன்றிய கல்வி அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக சமீபத்தில் நடத்தப்பட்ட நீட் தேர்வு பெரும் சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண் என பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன.பல்வேறு முறைகேடு புகார் கிளம்பி இருப்பதால் இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.மேலும் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.அய். அல்லது உச்சநீதிமன்ற மேற்பார்வையிலான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டு இருக்கின்றன.
மறுபுறம் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் குஜராத்தில் 5 பேர், பீகாரில் 13 பேர் என அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.இவ்வாறு விசாரணை நடவடிக்கைகள் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நீட் தேர்வு நடத்தியதில் 2 விதமான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.இதில் முதற்கட்ட தகவல்களின்படி, தேர்வின்போது நேரமின்மைக்காக சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் கருணை மதிப்பெண் கொடுத்ததை அரசு ஏற்கவில்லை. எனவே, அந்த மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மறுதேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதைப்போல 2 இடங்களில் கூடுதல் தவறுகள் நடந்திருப்பது வெளியாகி இருக்கிறது. இந்த பிரச்சினையை அரசு மிகவும் தீவிரமாக எடுத்து இருக்கிறது என்பதை மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.
இதை நாங்கள் ஒரு தர்க்க ரீதியான முடிவுக்கு கொண்டு வருவோம்.இந்த முறைகேட்டில் தேசிய தேர்வு முகமை மூத்த அதிகாரிகள் உள்பட எந்த அதிகாரிகளும் தவறு இழைத்திருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தேசிய தேர்வு முகமை ஒரு தன்னாட்சி அமைப்பாக இருந்தாலும், அதில் ஏராளமான சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. இது குறித்து அரசு கவலைப்படுகிறது. எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என மீண்டும் உறுதியளிக்கிறேன். தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”
-இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.