மேற்குவங்கத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பலி
கொல்கத்தா, ஜூன் 17 திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கத்தின் செலடா நோக்கி சென்ற கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இன்று (17.6.2024) காலை 9 மணியளவில் நின்று கொண்டிருந்தது. நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் அதிவேகத்தில் மோதியது. இதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம்புரண்டு உருக்குலைந்தன.
இந்த விபத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் பலரும் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது நிகழ்வு இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் மம்தா தெரிவித்துள்ளார். மேலும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 033-2350-8794 , 033-238-33326 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு ரயில் பயணிகள் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதேமாத்தில் ஒரிசா ரயில் விபத்தில் 300 க்கும்மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டும் விபத்து தொடர்கதையாகி உள்ளது இருப்பினும் அதே நபரை மீண்டும் மோடி ரயில்வே அமைச்சராக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது