தன் வருமானத்தை இதய அறுவை சிகிச்சைக்கு வழங்கும் பாடகி… 3,000 குழந்தைகளுக்கு மறுவாழ்வு!

Viduthalai
2 Min Read

பிரபல பாடகி ஒருவர், இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க நிதி திரட்டிக் கொடுத்ததன் மூலம், இதுவரை 3,000 உயிர்களைக் காப்பாற்றிய செய்தி சமூக வலைதளங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த பிரபல பாடகியான பாலக் முச்சாலின் முயற்சிதான் அது.
இவர், இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்காக ‘Savings little heart’ என்கிற அமைப்பின் மூலம் நிதி திரட்டி இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளின் சிகிச்சைக்காக தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.

பாலக் முச்சால் மற்றும் அவரது சகோதரர் பாலாஷ் முச்சால் இருவரும் இணைந்து இந்தியாவிலும்,வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டி வருகின்றனர்.
இதன் மூலம் இதுவரை சுமார் 3000 குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார் பாடகி பாலக் முச்சால். சமீபத்தில், இந்தூரைச் சேர்ந்த அலோக் சாஹூ என்ற எட்டு வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காட்சிப் பதிவை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து ’3000 உயிர்கள் காப்பாற்றப்பட்டன! அலோக்கிற்கான உங்கள் அன்புக்கு நன்றி! அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, இப்போது அவர் நலமாக இருக்கிறார்’ எனப் பகிர்ந்திருந்தார்.

இதுகுறித்து பேசிய பாலக், “இன்னும் 413 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. தற்போது இதுதான் எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியம். அறுவை சிகிச்சைக்கு பண வசதியில்லாத பெற்றோர்‌ சார்பாக, என்னுடைய இசைக் கச்சேரியின் மூலம் வரும் தொகை அனைத்தையும் ஏழைக் குழந்தைகளின் சிகிச்சைக்காக செலவிடுகிறேன். இந்த பணிக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் பாடிய திரைப்பட பாடல்கள் ஹிட் ஆன பின்பு என்னுடைய‌ ஊதியமும் அதிகரித்தது. படத்தில் பாடுவதற்கு கிடைத்த ஊதியத்தில் 13, 14 குழந்தைகளின் சிகிச்சைக்கு என்னால் உதவ முடிந்தது.

திரைப்படங்களில் வாய்ப்பு இல்லாதபோது, மூன்று மணி நேரம் இசைக்கச்சேரி நிகழ்ச்சி நடத்தி குழந்தையின் சிகிச்சைக்காக பணம் திரட்டுவேன்.
இசையை வைத்து சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே என்னுடைய நோக்கம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வரும் பாலக் முச்சால், கின்னஸ் உலக சாதனை மற்றும் லிம்கா சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளார். இவரது சேவையை சமூகவலைதளத்தில் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
நன்றி: விகடன் இணையம், 15.6.2024

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *