ஒன்றிய அமைச்சர்களா, ஆர்.எஸ்.எஸ். சேவகர்களா?

Viduthalai
2 Min Read

புனே தொகுதியில் இருந்து தேர்ந்தெ டுக்கப்பட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், ஒன்றிய விமானப்போக்குவரத்துத் துறை இணை அமைச்சருமான முரளிதர் மோஹோல் ஆர்.எஸ்.எஸ். எங்கள் தாய் அமைப்பு – அதுதான் ஆட்சியை வழிநடத்துகிறது என்று கூறியுள்ளார்.
சரத்பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து அஜித்பவாரைத் தனியாக கொண்டுவந்து தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வச் சின்னமான மேஜைக்கடிகாரத்தையும் அஜித்பவாருக்கே வழங்கியது. அதன் பிறகு அவரோடு கட்சியை உடைத்துகொண்டு வந்த சட்டமன்ற உறுப்பி னர்களை சேர்த்து மகாராட்டிராவில் கூட்டணி ஆட்சி அமைத்தது, அஜித்பவாருக்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

இந்த நடவடிக்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடுமையாக எதிர்த்துள்ளது. அதன் ஆர்கனைசர் இதழில் எழுதியிருப்பதாவது: ‘‘தேசியவாத காங்கிரசை உடைக்காமல் இருந்திருந்தால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் சரத்பவார் அரசியல் சன்னியாசம் பெற்றிருப்பார், ஆனால் தேவையில்லாமல் தேசியவாத காங்கிரசை உடைத்து அஜித்பவாரோடு கூட்டு சேர்ந்ததால் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மகாராட்டிராவில் பாஜகவிற்கு பணியாற்றவில்லை’’ என்று எழுதி உள்ளது.
அதே போல் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், என்ன கூறுகிறார்? ‘‘மோடியின் திமிர்த்தனமான நடவடிக்கை தான் 240க்குள் சுருண்டு போகக் காரணம்’’ என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பேசிய ஒன்றிய அமைச்சர் முரளிதர் மோஹோல், ‘‘ஆர்.எஸ்.எஸ். எங்கள் தாய் அமைப்பு. அதிகார மய்யமாக இருந்து எங்களை வழிநடத்துகிறது. எங்கள் பணியில் உள்ள தவறுகளை ஆர்.எஸ்.எஸ். சுட்டிக்காட்டினால், நாங்கள் நிச்சயம் அவற்றைக் கேட்டு நடப்போம்!; அவர்கள் எங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதை நாங்கள் திருத்திக்கொள்வோம். எங்கள் இரண்டு பேருக்குமிடையே மூன்றாம் தரப்பினர் வந்து தலையிடத்தேவையில்லை’’ என்று கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் ஆந்திராவில் பாஜக, ஜனசேனா அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கூட்டணி 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சி மட்டுமே 16 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ஒன்றிய பாஜக அரசுக்கு உறுதுணையாக நிற்கிறது.

இக்கட்சியை சேர்ந்த சிறீகாகுளம் மக்களவை தொகுதி எம்.பி.கே.ராம்மோகன் நாயுடுவுக்கு ஒன்றிய அமைச்சரவையில் விமானத் துறை வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 13.6.2024 அன்று மதியம் டில்லியில் ஒன்றிய விமானத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது ஒரு காகிதத்தில் 21 முறை ‘‘சிறீராம ஜெயம்’’ என எழுதி விட்டு, அதன் பிறகே அவர் அந்தக் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.
ஒன்றிய அமைச்சர்களாக இருக்கக் கூடியவர்கள், மதச் சார்பின்மையை வலியுறுத்தும் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உண்மையாக இருப்போம் என்று கூறி பதவிப் பிரமாணம் எடுத்தவர்கள் – ‘இந்து ராஜ்ஜியத்தை அமைப்போம்!’ என்கிற ஆர்.எஸ்.எஸ். சொல்படி நடப்போம் என்றும், கோப்புகளில் கையொப்பம் போடுவதற்குமுன் ‘சிறீராமஜெயம்’, ‘சிறீராம ஜெயம்’ என்று 21 முறை எழுதுவது என்பதும் எதைக் காட்டுகிறது? ஒன்றிய அரசு எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்று தேர்தலுக்கு முன் பேசி வந்தவர்கள், பெரும்பான்மை என்ற நிலையை எட்டாத நிலையில், இப்பொழுது, ஆட்சியில் இருந்து கொண்டே அரசமைப்புச் சட்டத்தை உருக்குலைக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள் என்பது தெளிவாகிறது.
‘‘இந்தியா கூட்டணி’’ வலுவாக உள்ளது. ஆளும் என்.டி.ஏ. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கூர்மையாக கணித்து மிக முக்கியமாக முறியடிக்கும் பொறுப்பு உண்டு – எச்சரிக்கை!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *