உடல் காட்டும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்…

Viduthalai
2 Min Read

சிறிய பிரச்சினை தானே என்று அலட்சியமாக இருப்பது, பின்னாளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்

அரசியல்

வீட்டு வேலைகள், பிள்ளைகளின் கல்வி, பொருளாதாரம், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் போன்றவற்றில் கவனம் செலுத்தும் பெண்கள்,  தங்களுடைய உடல் மற்றும் மன நலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. சிறிய பிரச்சினை தானே என்று அலட்சியமாக இருப்பது, பின்னாளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய சில ஆரோக்கிய பிரச்சினைகள் குறித்து பார்க்கலாம்:

மூச்சுப் பிரச்சினை

மாடிப் படிகளில் ஏறும் போதோ, நீண்ட தூரம் நடக்கும் போதோ அதிகமாக மூச்சிரைப்பது, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது, நெஞ்சு வலி, குமட்டல், வியர்த்தல் போன்ற அறிகுறிகள் மற்றும் வழக்கமான நடைமுறையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

உணர்வின்மை, மரத்துப் போதல்

ஒரே நிலையில் நின்று வேலை செய்யும்போது, உடலில் குறிப்பிட்ட பகுதி மரத்துப் போகும். ரத்த ஓட்டம் சீராகும்போது, அடுத்த சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். அவ்வாறு இல்லாமல் அரை மணி நேரத்திற்கும் மேலாக உணர்வின்றி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மேலும்,  பேச முடியாமல் தடுமாறுவது, நடப்பதில் சிரமம் ஏற்படுவது, பார்வை மங்கலாகுவது போன்ற சிரமங்கள் இருந்தால், அவை பக்கவாதம் வருவதற்கான அறிகுறிகளாகவும் இருக்கக்கூடும்.

மாதவிடாய் பிரச்சினைகள்

மாதவிடாய் நேரங்களில் வழக்கமானதை விட அதிக வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படும்போது, அதற்கான காரணத்தை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். கர்ப்பப்பையில் கட்டிகள், பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்த்தொற்று காரணமாகவும் இதுபோன்று ஏற்படலாம். சரியான காரணத்தைக் கண்டறிந்து, சிகிச்சை எடுப்பதால் குழந்தைப்பேறில் ஏற்படும் பிரச்சினை, புற்றுநோய் பாதிப்பு போன்றவற்றைத் தடுக்கலாம்.

சருமத்தில் மாற்றம் 

சரும நிறம், தன்மை போன்றவற்றில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டாலோ, புதிதாக மச்சம் தோன்றுதல், ஏற்கெனவே உள்ள மச்சம் பெரிதாகுதல் ஆகியவை நிகழ்ந்தாலோ உடனடியாக அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். சருமம் சார்ந்த நோய்களை தொடக்கத்திலேயே கண்டறிந்தால் எளிதாகக் குணப்படுத்தலாம்.

மார்பகத்தில் மாற்றங்கள்

மார்பகத்தில் மாற்றம் ஏற்படுதல், மார்பகக் காம்பில் இருந்து திரவம் வெளியேறுதல் போன்றவற்றைக் கண்டவுடன் மருத்துவரை அணுக வேண்டும். இது புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால், முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *