தனியார் துறையில் 75 சதவீத இடஒதுக்கீடு சட்டம் ரத்தாம்!

Viduthalai
2 Min Read

பஞ்சாப்-அரியானா  உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி,நவ.19- தனியார் துறை வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் அரியானா மாநில அரசின் சர்சைக்குரிய சட்டத்தை பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

உள்ளூர் சமூக மக்களின் குறிப்பாக, ஜாட் இன மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. அரசு, தனியார் வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீதம் கட்டாயம் இடஒதுக்கீடு செய்யும் ‘‘அரியானா மாநில உள்ளூர் மக்கள் வேலைவாய்ப்பு சட்டம்’’கடந்த 2020ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. அதன் பிறகு அந்த சட்டத்தில்பல்வேறு மாற்றங்கள் செய்யப் பட்டன.

இந்த சட்டமானது மாத ஊதியம் அல்லது ரூ.30,000-க்கும் குறைவான ஊதியத்துடன் 75% தனியார் துறை வேலைவாய்ப்பு களை மாநிலத்தில் வசிப்பவர் களுக்கு உறுதி செய்கிறது. மாநிலகுடியுரிமை சான்றிதழை பெறுவதற்கான காலமும் 15 ஆண்டுகள் என்பதிலிருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் மாநில அரசின் இந்த நடவடிக்கை அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டேஉள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மனோகர் லால் கட்டார் அரசுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் காங்கிரசில் இணைந்தார்

ஜெய்ப்பூர், நவ. 19- பா.ஜ.க. தனது வாக்குறுதியில் இருந்து விலகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியில் இணைந்த ராஜஸ்தான் மாநில பாஜக மூத்த தலைவர் அமின் பதான் குற்றம் சாட்டியுள்ளார். 

ராஜஸ்தான் மாநில பாஜக சிறுபான்மையினர் அணியின் மாநிலத் தலைவரும், ராஜஸ்தான் ஹஜ் கமிட்டியின் தலைவருமான அமின் பதான், பாஜகவில் இருந்து விலகி ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமின் பதான், “பாஜகவில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்தேன். கவுன்சிலராகவும், பல்வேறு வாரியங்களின் தலைவராகவும் இருந்துள்ளேன்.

பாஜகவில் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.  நான் பாஜகவில் சேர்ந்தபோது பாஜகவின் சித்தாந்தமும் கொள்கையும் இப்படி இருந்ததில்லை. முன்பு தலை வர்களாக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், பைரோன் சிங் ஷெகாவத் போன்றவர்கள் தற்போது அக்கட்சியில் இல்லை.

பா.ஜ.க. தனது வாக்குறுதியில் இருந்து விலகி விட்டது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை யெல்லாம் பார்த்து மனம் வேதனை அடைந்தே பாஜகவில் இருந்து விலகி விட்டேன். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்காக அசோக் கெலாட் அரசு செயல்பட்டுள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சியில் சேர முடிவெடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *