ஒன்றிய அரசு பணி போட்டித் தேர்வுகளுக்கு “நான் முதல்வன்” திட்டத்தில்

viduthalai
1 Min Read

 இலவச உறைவிட பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜூன் 8- ‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வுகள் பிரிவின் மூலம் ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கி பணி தேர்வுகளுக்கு 6 மாதஇலவச உறைவிட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆர்வம் உள்ள மாணவர்கள் இன்று (8.6.2024) முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
‘நான் முதல்வன்’ திட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான தனி பிரிவை இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் 7ஆம் தேதி தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு இளைஞர்கள் எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சி திட்டங்களை இந்த பிரிவு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ‘ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கிப் பணி ஆகிய தேர்வுகளில் தமிழ்நாடு இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படும்’ என்று 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின்கீழ் இயங்கிவரும் ‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வுகள் பிரிவின் மூலம் கட்டணமில்லா உறைவிட பயிற்சி தொடங்கப்பட உள்ளது.

இதில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கிப் பணி தேர்வுஅல்லது ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் மற்றும் ரயில்வே தேர்வு, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி பெற முடியும். இதற்கு 1,000 பயனாளர்களை தேர்ந்தெடுக்க ஜூலை 14ஆம் தேதி இரு வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

ஆர்வம் உள்ள மாணவர்கள், இணையதளத்தில் (https://www.naanmudhalvan.tn.gov.in) உள்ள அறிவிக்கையை படித்துப் பார்த்து, இன்று (8.6.2024) முதல் விண்ணப் பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஜூன் 23ஆம் தேதி. தேர்வுக்கானநுழைவுச்சீட்டு ஜூலை 9இல் வெளியிடப்படும். தேர்வு ஜூலை 14ஆம் தேதி காலை 10 முதல் 11 மணி வரைநடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *