புதுடில்லி, ஜூன் 1 புதிய மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரr்சாரம் செய்வதற்காக இன்று (1.6.2024) வரை இடைக்கால பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கெஜ்ரிவாலின் இடைக்கால பிணை இன்றுடன் (1.6.2024) முடிவடைவதால், கெஜ்ரிவால் நாளை (2.6.2024) திகார் சிறையில் சரணடைய வேண்டும். இந்நிலையில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (31.5.2024) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ‘‘ஜூன் 2 ஆம் தேதி (நாளை) கண்டிப்பாக சரணடைவேன் . அதில் எந்தத் தயக்கமும் எனக்குக் கிடையாது. சரணடைந்த பிறகு எவ்வளவு காலம் என்னை சிறையில் அடைத்திருப்பார்கள் என தெரியவில்லை. ஆனால், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற சிறைக்குச் செல்கிறேன் என்பதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. எப்போது வருவேன் என்று தெரியாது. இந்தக் காலக்கட்டத்தில் எனது வயதான பெற்றோர்களையும், எனது குடும்பத்தையும் டில்லி மக்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
சிறையில் இந்தமுறை என்னை அதிகம் சித்ரவதைக்கு உள்ளாக்கலாம். ஏனெனில் தேர்தல் பிரச்சாரங்களில் பாஜவுக்கு எதிராக பல்வேறு உண்மைகளை வெளியில் கொண்டு வந்தேன். அதில் முக்கியமானது பிரதமர் நரேந்திர மோடி ஓய்வு பெறப்போவது குறித்த எனது தகவல் பாஜவின் மூத்த தலைவர்களையே ஆட்டம் காண வைத்து விட்டது. இவை அனைத்தையும் மனதில் வைத்து கொண்டு விசாரணை அமைப்புகள் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மூலம் பல துன்பங்களை பாஜ எனக்குத் தர வாய்ப்பு உள்ளது. முன்னதாக திகார் சிறையில் எனக்கு வழங்கப்பட்ட சலுகைகள் கூட நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக மேலும் ஒரு வார காலம் இடைக்கால பிணையை நீடிக்கக் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு டில்லி நீதிமன்றத்தில்் இன்று (1.6.2024) பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.