திராவிடர் கழகத்தின் ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஆங்கில ஏட்டிற்குப் பாராட்டு!
மூத்த காங்கிரசு தலைவர் சோனியா காந்தி வாழ்த்து!
புதுடில்லி, மே 31 திராவிடர் கழகத்தின் சார்பாக ‘விடுதலை’ நாளேடு, ‘உண்மை’ மாதமிரு இதழ், ‘பெரியார் பிஞ்சு’ – குழந்தைகளுக்கான மாத இதழ் ஆகிய தமிழ் இதழ்களோடு ஆங்கிலத்தில் ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ மாத இதழும் வெளியிடப்பட்டு வருகிறது. பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் அவர்களால் நிறுவப்பட்டு, தொடக்கம் முதலே ஆசிரியர் கி.வீரமணி அவர்களை முதன்மை ஆசிரியராகவும் கொண்டு ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ இதழ் வெளிவருகிறது. 1971 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இதழ் பொன் விழா ஆண்டையும் தாண்டி, பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, பெண் விடுதலை, மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு என பல முற்போக்கு கருத்தியலில் கட்டுரைகளையும், பல செய்திக் கட்டுரைகளையும் தாங்கி வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டு (2024) ஏப்ரல் மற்றும் மே மாத ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ இதழ்கள் 18 ஆவது மக்களவைத் தேர்தல் செய்திகள், ஆசிரியரின் பரப்புரைகள், இந்தியா கூட்டணித் தலைவர்களின் கருத்துகளை உள்ளடக்கி, தேர்தல் சிறப்பு இதழாக வெளிவந்தது. தேர்தல் சிறப்பு இதழ்கள், இந்தியா கூட்டணித் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஆங்கில இதழின் தேர்தல் சிறப்பு இதழ்கள் காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரும், காங்கிரசு கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
திருமதி சோனியா காந்தி
பாராட்டுக் கடிதம்
‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ சிறப்பு இதழ்களைப் படித்த திருமதி சோனியா காந்தி அவர்கள், இதழின் முதன்மை ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பாராட்டியும், வாழ்த்துகளையும் தெரிவித்து, கடிதம் அனுப்பியுள்ளார். ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ இதழ் கருத்தாழமிக்க கட்டுரைகளைத் தாங்கி வருகிறது – கட்டுரை அளித்தவர்களுக்கும், ஆசிரியர் குழுவிற்கும் தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்வதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களாட்சி குறித்து நாடு தழுவிய அளவில் அனைவரும் விவாதிக்கவேண்டிய கட்டாயம் தற்பொழுது ஏற்பட்டுள்ளதாகவும், கூட்டாட்சித் தத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டு, இந்தி யாவின் அரசமைப்புச் சட்டம் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படவேண்டும் என்ற விருப்பத்தி னையும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இத்தகைய பணிகளில் ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ இதழ் வெளிவரவேண்டும்; மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, பிரசுரிக்கப்பட வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு திருமதி சோனியா காந்தி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கடிதமும், அதன் முழுமையான தமிழாக்கமும் அருகில் காண்க.
‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஏட்டின் பணிகளைப் பாராட்டி, கடிதம் எழுதிய திருமதி சோனியா காந்தி அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். ஆசிரியர் குழுவும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது.
திருமதி சோனிய காந்தி அவர்களின் கடிதத்தின் தமிழாக்கம்:
மே, 23, 2024
அன்புள்ள திரு. கி. வீரமணி அவர்களுக்கு,
என் அன்பு வணக்கம். இந்தக் கடிதம் தங்களைச் சென்றடையும் போது சீரான உடல்நலத்துடன் தாங்கள் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தங்களது இயக்கத்தின் சார்பாக வெளியிடப்பட்டு வரும் ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ (The Modern Rationalist) மாத இதழின் தேர்தல் சிறப்பிதழ் கிடைக்கப்பெற்றேன், நன்றி!
கடந்த பத்து ஆண்டுகளில் ஜனநாயகத்தின் அவலநிலை வேதனைக்குரியதாகவே இருந்து வந்துள்ளது. இதைப் பற்றிய கட்டுரைகளை, செய்திகளை இந்தச் சிறப்பிதழில் கண்டேன். உன்னிப்பாகப் படித்து உணரும்படியான பல கட்டுரைகளை எழுதியவர்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுகள். ஆசிரியர் குழுவிற்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகம் குறித்து நாடு தழுவிய அளவில் அனைவரும் விவாதிக்க வேண்டியது தற்போது அவசியம் மட்டுமல்ல – அவசரமும் கூட. கூட்டாட்சித் தத்துவம் குறித்தும் விவாதம் நடைபெறவேண்டும். இந்தியாவின் உண்மைப் பொருள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படவேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் விவாதத்திற்குரிய பிரச்சினைகள் பல உள்ளன. ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ இதழ் அவை சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடட்டும். மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்து பிரசுரிக்கட்டும். தன் சீரிய பணியை ஆசிரியர் குழு தொடர்ந்து செய்யும் என்று நம்புகிறேன்.
மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன். எதிர்காலம் சிறந்து விளங்க தங்களை வாழ்த்துகிறேன்!
அன்புடன்
சோனியா காந்தி