மூத்த பத்திரிகையாளர்கள் கணிப்பு
புதுடில்லி, மே 30 மக்களவைத் தேர்தலில் “இந்தியா” கூட்டணி 280 முதல் 290 இடங்களைக் கைப்பற்றும்; காங்கிரஸ் கட்சி தனித்தே 120 முதல் 130 தொகுதிகளில் வெல்லும் என கிடைத்திருக்கும் ஆய்வு முடிவு டில்லியில் “இந்தியா” கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்குக் காரணம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
மக்களவைத் தேர்தலின் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஜூன் ஒன்றாம் தேதி நடை பெறுகிறது. அன்றைய தினம் வெளியாகும் மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
பாஜகவின் நம்பிக்கை
மக்களவைத் தேர்தல் பிரr்சார களத்தில் பாஜகவைப் பொறுத்தவரையில் 370 முதல் 400 இடங்களில் வெல்வோம் என்பது தீவிர பேச்சாக இருந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றியே தீரும் என்பது பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
“இந்தியா” கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை
அதேநேரத்தில் பாஜக கூட்டணிக்கு 400 இடங்கள் கிடைக்காது; பெரும்பான்மையே கிடைக்காது என்பது “இந்தியா” கூட்டணி தலைவர்களின் கருத்தாக இருந்தது. யோகேந்திர யாதவ் உள்ளிட்ட தேர்தல் வியூக வகுப்பாளர்களும் கூட பாஜக தனித்து 260 முதல் 280 இடங்களில்தான் வெல்லும் என தெரிவித்திருந்தனர்.
டில்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தப் பின்னணியில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 ஆம் தேதிக்கு முன்னதாக இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் ஒன்றாம் தேதியே டில்லியில் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
குட்பை சொன்ன ராகுல் காந்தி
மேலும் கடந்த சில நாள்களாக ராகுல் காந்தியும் தமது தேர்தல் பிரச்சாரத்தில் ஜூன் 4 ஆம் தேதிக்குப் பின்னர் மோடி வீட்டுக்குப் போவது உறுதி என பேசி வருகிறார். நேற்றைய (29.5.2024) தேர்தல் பிரச்சாரத்திலும் “ஜூன் 4–க்கு பிறகு…‘‘Good Bye BJP Good Bye’’ நரேந்திர மோடி… டாடா! பொதுமக்களை ஏமாற்றும் இந்த போலி ஆசாமிக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. இந்தியா வாக்குகளைப் பெறுகிறது – சத்தமாகவும் தெளிவாகவும்! பாஜகவிடம் இருந்து நாடு விடுதலை பெறும், நாட்டின் உண்மையான நல்ல நாட்கள் வரவுள்ளன – விரைவில், வெகு விரைவில்! என நம்பிக்கை யோடு பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.
மூத்த பத்திரிகையாளர்களின் ஆய்வறிக்கை
இது தொடர்பாக டில்லி வட்டாரங்களில் விசாரித்த போது, காங்கிரஸ் கட்சியின் நிகழ்வுகளை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக கவனித்து வரும் சில மூத்த பத்திரி கையாளர்கள், மக்களவைத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என “இந்தியா” கூட்டணி தலைவர்களிடம் ஆய்வறிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளனர்.
ஆய்வு முடிவு என்ன?
மூத்த பத்திரிகையாளர்கள் கொடுத்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கையில், இந்தியா கூட்டணிக்கு 280 முதல் 290 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தனித்தே 120 முதல் 130 இடங்களைக் கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். வட இந்தியா தேர்தல் களத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்தான் இந்த தலைகீழ் மாற்றத்துக்கு காரணம் எனவும் அந்த ஆய்வறிக்கை விவரித்திருக்கிறதாம்.
ஜூன் ஒன்றாம் தேதி
டில்லியி்ல் கூட்டம்
இதனடிப்படையில்தான் புதிய ஆட்சி அமைப்பதற்கான முன் நகர்வுகளை மேற்கொள்ள ஜூன் ஒன்றாம் தேதி டில்லியி்ல் கூட்டத்துக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். தற்போது இந்த ஆய்வு முடிவுகள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டும் வருகின்றன.