உ.பி. மக்களவை தேர்தல் களத்தில் பா.ஜ.க.வை பதம் பார்க்கப் போகிறதா – ராகுல் – அகிலேஷின் ‘சமூகநீதி’ வியூகம்?

Viduthalai
2 Min Read

லக்னோ, மே 30 உத்த ரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜக எதிர்பார்ப்பது போல இருக்காது என ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் இடைவிடாமல் பேசி வருவதற்கு இருவரது ‘சமூகநீதி’ வியூகம்தான் காரணம் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். சமூக நீதியை பன்னெடுங்காலமாக உரத்துப் பேசி வருகிறது திராவிடர் இயக்கமும் தமிழ்நாடும். 100 ஆண்டுகளுக்கு முந்தைய தென்னிந்திய நல உரிமைச் சங்கம், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆளும் திராவிட கட்சிகள் என சமூக நீதிப் பயணம் மிக நீண்டது.

வட இந்தியாவும் சமூக நீதியும்
ஆனால் வட இந்தியாவில் 1990களில் வீசிய மண்டல் ஆணையப் புயல்தான் சமூக நீதியை வேர்பிடித்து நிற்க வைத்தது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அரசியல் எழுச்சிக்கு சமூக நீதி முழக்கம் 1990களில் உறுதியான ஆதரவைக் கொடுத்தது. இதனால்தான் முலாயம் சிங், மாயாவதி, லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் உள்ளிட்டோர் முதலமைச்சர் நாற்காலியில் அமர முடிந்தது. ஒருவகையில் காங்கிரசுக்கு வடக்கே அத்தியாயத்தை முடித்து வைத்ததும் கூட இந்த சமூகநீதிதான்.

சரித்திரம் படைத்த சமாஜ்வாதி கட்சி
காலம் கடந்தேனும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று காட்டுகின்றன. 2022-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் 40%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. அதேநேரத்தில் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் முன் எப்போதும் இல்லாத வகையில் 36 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்தது. பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரசின் வாக்கு வங்கி காணாமலேயே போனது.

என்ன செய்தார் அகிலேஷ்
அதாவது பகுஜன் சமாஜ் கட்சிக்கான தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வாக்குகளும் காங்கிரஸின் பொதுவான வாக்குகளும் சமாஜ்வாதி கட்சிக்கு திசை திரும்பியதுதான் அக்கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரிக்கக் காரணம். தற்போதைய மக்களவைத் தேர்தலில் இதனை மிக மிக கெட்டியாகவே பிடித்துக் கொண்டார் அகிலேஷ். யாதவர்களுக்கான கட்சியாக சமாஜ்வாதி கட்சியை நடத்தாமல் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் அனைவருக்குமான பரந்துபட்ட கட்சியாக சமாஜ்வாதியை கட்டமைத்துவிட்டார் அகிலேஷ் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்விலேயே இந்த அதிரடியைத்தான் காட்டி இருந்தார் அகிலேஷ். பொதுத் தொகுதிகளிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தவரைகளை நிறுத்தினார்.. யாதவர்களுக்கு மட்டுமல்லாமல் இதர பிற்படுத்தப்பட்ட, இதுவரை புறக்கணிக்கப்பட்ட ஜாதியினருக்கும் வேட்பாளர் தேர்வில் வாய்ப்பு கொடுத்தார். தாழ்த்தப்பட்டோரிலும் புறக்க ணிக்கப்பட்ட ஜாதியினரைத் தேடித் தேடி வாய்ப்பு தந்தார் அகிலேஷ் யாதவ். அனைவருக்கு மான சமூகநீதியையே தேர்தல் வியூகமாக அகிலேஷ் யாதவ் செயல்படுத்தினார்.

கை கோர்த்த ராகுல்
இப்படியாக அகிலேஷ் யாதவின் வியூகத்துடன் மக்களவை தேர்தல் அறிக்கையையே சமூகநீதி செயல் திட்டமாக வெளியிட்ட ராகுல் காந்தியும் கை கோர்த்தால் களம் அதகளம்தானே. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பின் மூலமாக கூடுதலான இடஒதுக்கீடு வாய்ப்பு என்பவை எல்லாம் ராகுல்- அகிலேஷ் இணையரின் வாக்குறுதிகள். இந்த வாக்குறுதிகள், இவர்களது புதிய பாய்ச்சல்தான் உ.பி. லோக்சபா தேர்தல் களத்தில் பாஜகவை பதற வைத்துக் கொண்டிருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *