தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்பவர்களுக்கு மனநோய் சிகிச்சை தேவை பாடகர் சிறீனிவாஸ்

Viduthalai
1 Min Read

ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, “பூரி ஜெகனாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, “நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை.ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்.
நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்” என்று பேசியுள்ளார்.

“பூரி ஜெகனாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்” என்று பாஜக வேட்பாளர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி, “நான் மனிதப் பிறவியே அல்ல” என்று கூறியிருப்பது மீண்டும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பிரபல பாடகர் சிறீனிவாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
அதில், “யாராவது தங்களை கடவுளின் அவதாரம் என்றோ, சிறப்பு படைப்பு என்றோ கருதினால், அவர்களின் மன நோய்க்கு உடனடியாக சிகிச்சை தேவை. மனிதனாக இருப்பது ஒன்று மட்டுமே முக்கியம். மனிதனாக இருப்பதை விட சிறந்தவர்கள் இங்கு யாரும் இல்லை.

நான் இங்கு ஒருவரைப் பற்றி பேசவில்லை. ஒவ்வொரு துறைகளிலும் வெற்றிகரமாக உள்ள சிலருக்கு இந்த மனநோய் உள்ளது. உங்களால் முடிந்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியைத் தான் பாடகர் சிறீனிவாஸ் விமர்சித்துள்ளாரா என்று நெட்டிசன்கள் இந்த பதிவை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *