சென்னை, மே 22 தமிழர்களைத் திருடர்கள் என்பதா என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பூரி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,”ஒடிசாவில் கனிம வளங்கள் ஏராளமாக இருந்த போதிலும் மக்களிடம் தொடர்ந்து வெளியே செல்லும் நிலை இருக்கிறது. ஒடிசாவின் நிலையை பார்த்து நான் வேதனைப்படுகிறேன். பிஜு ஜனதா தள் கட்சியின் சிறு நிர்வாகிகளும் தற்போது மிகப் பெரும் பணக்காரர்களாக இருக்கின்றனர். பூரி ஜெகன்னாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போய்விட்டது. நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகன்னாதரிடம் முறையிடலாம். ஆனால், ஜெகன்னாதர் கோயில் பொக்கிஷ் அறை சாவியே காணாமல் போய்விட்டது. அந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்” என விமர்சித்து இருந்தார்.
அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து தற்போது பிஜு ஜனதா தள் கட்சியின் முக்கிய பிரமுகராக இருக்கும் மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரியும், மதுரையைச் சேர்ந்தவருமான வி.கே.பாண்டியனின் பெயரைக் குறிப்பிடாமல்தான் பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக சாடினார். 2000ஆம் ஆண்டு நடைபெற்ற அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற வி.கே.பாண்டியன் பஞ்சாப் கேடர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2002ஆம் ஆண்டில் ஒடிசா அய்.ஏ.எஸ். அதிகாரி சுஜாதாவை மணம் முடித்ததால் அம்மாநில பணிக்கு மாற்றப்பட்டார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
இந்நிலையில் வி.கே.பாண்டியனை விமர்சித்ததன் மூலம் தமிழர்களைத் திருடர்கள் என்பதா என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவரது ‘எக்ஸ்’ பதிவில், “தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம். வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை – கோட்பாடுகள் – செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும், தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும் – மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல! முன்னதாக, உத்தரப் பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார்.
பகை உணர்வைத் தூண்டுவதா?
மதம், மொழி, இனம் மற்றும் மாநிலத்தின் பெயரால், இன்னொரு தரப்பு மக்களைத் தூண்டிவிடும் செயல் ஆபத்தானது என்று எனது கண்டனத்தை அப்போதே தெரிவித்து இருந்தேன். சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டிய அரசியல் தலைவரே பகையுணர்வைத் தூண்டுவது தவறு என்றும் கூறியிருந்தேன். ஆனாலும் தமிழ்நாட்டு மக்களை மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தைப் பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ளவில்லை. ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகன்னாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி இருக்கிறார்.
மக்களால் வணங்கப்படும் பூரி ஜெகன்னாதரை அவ மதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும், நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண் படுத்துவதுமாகும். ஒடிசா மக்களைத் தமிழ்நாட்டு மக் களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது? ஆல யத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்த லாமா? தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? தமிழர் கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?
மோடியின் இரட்டை வேடம்
தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும், அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்! வாக்குக்காகத் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.
ஏற்கெனவே உத்தரப்பிரதேசம் பதேபூரில் தென்னிந்தியர்களைக் குறைகூறி பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி
கடந்த 17.5.2024 அன்று பதேபூரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ‘‘வட இந்தியர்களை தென் இந்தியர்கள் மோசமாக நடத்துகின்றனர். நாம் அங்கு சென்று பிச்சை எடுக்கி றோம் என்று கிண்டல் அடிக்கிறார்கள். நமது ஹிந்தி மொழியை கொச்சையாகப் பேசி கேலி செய்கிறார்கள். அவர்கள் நமது நம்பிக்கை விரோதிகள், நமது நம்பிக்கைகளை குலைப்பவர்கள். ஹிந்து மதத்தின்மீது அவதூறு செய் பவர்கள்” என்று பேசியிருந்தார்.
இப்போது தமிழர்கள் திருடர்கள் என்று கூறும் அளவிற்குச் சென்றுவிட்டார்.