கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கூற்று – பணி நிறைவு விழாவில் நான் ஒரு ஆர். எஸ். எஸ். உறுப்பினர் என்றார்
கொல்கத்தா, மே.21- கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சித்தரஞ்சன்தாஸ் நேற்று (20.5.2024) ஓய்வு பெற்றார்.அவருக்கு சக நீதிபதிகள், வழக்குரைஞர்கள் இணைந்து பணி நிறைவு விழா நடத்தினர். இதில் நீதிபதி சித்தரஞ்சன்தாஸ் பேசும்போது, ‘நான் ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக இருந்தேன் என்பதை இங்கே ஒப்புக்கொண்டாக வேண்டும். எனது குழந்தைப் பருவம் முதல் இளமைப்பருவம் வரை அங்கே இருந்தேன். அந்த அமைப்புக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன்’ என்று கூறினார். ஆனால், தனது பணி நிமித்தமாக 37 ஆண்டுகள் அமைப்பை விட்டு விலகி இருந்ததாக கூறிய சித்தரஞ்சன்தாஸ், எனினும் அமைப்புக்கு திரும்பத் தயாராக இருப்பதாகவும், எந்த உதவிக்காகவும் அவர்கள் அழைத்தால் சென்று அவர்கள் வழங்கும் பணியை செய்வேன் என்றும் தெரிவித்தார்.மேலும் அவர், ‘எனது பணியில் அனைவரையும் சமமாகவே நடத்தினேன். அது செல்வந்தரோ, இடதுசாரியா, காங்கிரசோ, பா.ஜனதாவோ அல்லது திரிணாமுல் காங்கிரசோ யாராக இருந்தாலும் ஒரே மாதிரியாகவே நடந்து கொண்டேன்’ என்றும் கூறினார்.