100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

viduthalai
2 Min Read

சென்னை, மே 19 மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத் திட்டத்தின்கீழ் பதிவு செய்து கொண்ட வர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும் பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.

இந்த வேலைகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்து எழுந்து வந்தது. இந்த நிலையில் மத்திய அதிகாரமளித்தல் குழுவின் கூட்டம் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது. அப்போது மக்களவை தேர்தல் நடத்தை அமலில் இருந்ததால் உடனடியாக அமல்படுத்த முடியாமல் போனது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மக்க ளவை தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளும் சற்று தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2023-2024 நிதி ஆண்டுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தினசரி ஊதியம் ரூ.294 வழங்கப்பட்டு வந்தது. இந்த அரசாணை யின் மூலம் தற்போது 2024-2025 நிதி ஆண்டுக்கான ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இது 8.5 சதவீத உயர்வு ஆகும். ரூ.25 கூடுதலாக அளிக் கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.1229 கோடி ஒதுக்கீடு செய்தும் ஊரக வளர்ச்சி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *