கேள்வி 1 : மாணவர்கள் மத்தியில் மோதல்களும், வன்முறைத் தாக்குதல்களும் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம்?
– குமரன், வேலூர்
பதில் 1 : பாடத் திட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டுவரப் படவேண்டும்.
மாணவர்களிடையே பொது ஒழுக்கத் தேவை பற்றி அறிவுறுத்தும் வாய்ப்பு மிக மிகக் குறைவாக உள்ளது.
மாணவர்களுக்குப் போதிய பகுத்தறிவுப் பிரச்சாரம், சமூக ஒருங்கிணைப்பின் தேவை பற்றி ஆசிரியர்களும் வலியுறுத்தி பாடங்களைச் சொல்லிக் கொடுக்க முன்வர வேண்டும்.
அரசு, பெற்றோர், மாணவர்கள் ஆகிய முத்தரப்பையும் கலந்து உறவாடி ஒரு தீர்வை – பொதுமையாக்கிட வேண்டும்.
—–
கேள்வி 2 : “எனது ஒரே ஒரு குறை வாழ்க்கையில் இதுதான்” என்று தாங்கள் எதைச் சொல்வீர்கள்?
– கல.சாக்கியமுனி, செங்கை
பதில் 2 : தந்தை பெரியார் அவர்களிடம் மேலும் பல கேள்விகள் கேட்டு, அவரது வாழ்க்கை – இயக்கம் – கொள்கை பற்றி நிறையக் கேட்டுப் பதிவு செய்யாமல் விட்டு விட்டோமோ என்பதுதான்!
(கடைசியாக 10 கேள்விகள் – 1973 ‘விடுதலை’ தந்தை பெரியார் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் இணைக்கக் கேட்டுப் பதிவு செய்தது மாதிரி)
—–
கேள்வி 3 : கல்வித் தேர்வுகளில் வழமைக்கு மாறாக மாணவியரை விஞ்சி மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கச் செய்வதற்கு என்ன வழி?
– அ.கி.வெங்கட்டராசு, பெரம்பூர்
பதில் 3 : மாணவர்களின் கவனச் சிதறலைக் குறைத்தால் இது சாத்தியமே! அவர்கள் அறிவில் குறைந்தவர்கள் அல்ல. கிரிக்கெட், சதா கைப்பேசி – இணையம் போன்ற கவனச் சிதறல்கள் குறைந்தாலே இது நடப்பது உறுதி!
—–
கேள்வி 4 : உங்கள் அறிக்கைகளையும், கட்டுரைகளையும் தங்கள் வாழ்விணையர் படிப்பதுண்டா?
– க.காளிதாசன், காஞ்சி
பதில் 4 : படிப்பதுடன் தயவு தாட்சண்யமின்றி விமர்சனம் வெளிப்படையாக தயக்கம் இன்றி கூறிடுவார் – எனது ‘இடிப்பாரை’!
—–
கேள்வி 5 : இந்திய மக்களவைத் தேர்தலில் வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களை 24 விழுக்காடு அளவில் வேட்பாளர்களாக பா.ஜ.க. ஆக்கியது எதைக் காட்டுகிறது?
– லோ.கனிமொழி, பெரம்பலூர்
பதில் 5 : அதன் கொள்கை வறட்சியையும், அறத்திற்கும், அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையே காட்டுகிறது!
பொது வாழ்க்கையில் இது மிகவும் கீழ்த்தர செயல் அல்லவா?
—–
கேள்வி 6 : உங்களை மிகவும் கவர்ந்த சுயசரிதை யாருடையது? ஏன்?
– ரேவதி பாலாஜி, கொளத்தூர்
பதில் 6 : பலவற்றையும் படித்தேன் – ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தனிச் சிறப்புடன் உள்ளன. எனவே ஒப்பீடு எளிதானதல்ல!
—–
கேள்வி 7 : கழிவு நீர் குழாய் அடைப்பை நீக்க விஷவாயு கசிவைக் கண்டறியும் “சென்சார்”களோடு, ‘ரோபோடிக்’ தொழில்நுட்ப இயந்திரங்களை சென்னை குடிநீர் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது குறித்து…?
– க.அரசு, மாதவரம்
பதில் 7 : மிகவும் பாராட்டப்பட வேண்டிய துறையாக குடிநீர் துறை உள்ளது. பாராட்டத்தக்க சாதனை!
—–
கேள்வி 8 : “ஆட்சி கை நழுவிப் போவதை பா.ஜ.க.வினர் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்ற ஒன்றிய நிதி அமைச்சரின் கணவரின் கூற்று உண்மையாகும் பட்சத்தில் அரசியல் குழப்பம் ஏற்படுமே?
– கா.வேங்கைமுத்து, கும்மிடிப்பூண்டி
பதில் 8 : அது ஓர் எச்சரிக்கை மணிதான். அளவுக்கு மீறி அதீதமாக அச்சப்பட வேண்டியதில்லை. மக்கள் சக்தியே எல்லாம்!
—–
கேள்வி 9 : சான்றுகள் இன்றி கைதுசெய்து சிறையில் அடைத்த பிறகு உச்சநீதிமன்றம் பிணை தந்து அனுப்பும் நிகழ்வு சங்கிலித் தொடர் ஆகிறதே?
– வா.தமிழமுது, மதுரை
பதில் 9 : எல்லாம் ஜூன் 4க்குப் பிறகு – தேர்தல் முடிவுக்குப் பின் விடியல் பிறக்கும்.
—–
கேள்வி 10 : “அவர்கள் வென்றால் மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆகிவிடுவார்” என்று அமித்ஷா வட மாநில தேர்தல் பரப்புரையில் பேசுகிறாரே?
– க.சங்கத்தமிழன், சென்னை
பதில் 10 : நமது முதலமைச்சர் என்ன பயங்கரவாதியா? எந்த வழக்கிலாவது குறுக்கு வழி ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளிவந்தவரா? இந்திய அரசமைப்புச் சட்டப்படி மக்கள் செல்வாக்கும், ஆதரவும் பெற்ற ஒருவர் பிரதமராக வருவதற்கு என்ன தடை? குடியா மூழ்கி விடும்?
இதழாக்கம்: நூலகர் கி.கோவிந்தன்