அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் – இளந் தலைவர் ராகுல்காந்தியின் அண்மைக்கால உரைகளிலும், (காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உள்பட) குறிப்பாக சமூகநீதி தொடர்பாக அவர் கூறி வரும் அழுத்தமான கருத்துகளிலும் தந்தை பெரியார் நூறு ஆண்டு காலமாகக் கூறி வந்த திராவிட இயக்கம் உயர்த்திப் பிடித்த கருத்துகளின் தாக்கத்தை அறிய முடிகிறது.
எடுத்துக்காட்டாக ராகுல் காந்தி ஆற்றிய உரையைப் படித்தால் இதன் உண்மை விளங்கும்.
“மெரிட் என்றால் என்ன? உண்மையில் நடந்த கதை ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன். இந்தியாவில் அய்.அய்.டி.க்களை போன்ற அமெரிக்காவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வு SAT என்று அழைக்கப்படுகிறது. முதன்முதலாக SAT தேர்வுகள் அமல் படுத்தப்பட்ட போது ஒரு வினோதம் நடந்தது.
வெள்ளை அமெரிக்க மாணவர்கள் மட்டுமே அதில் முதன்மை மதிப்பெண் பெற்றார்கள். கருப்பின அமெரிக்க மாணவர்களால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியவில்லை. ஸ்பானிஷ் மொழி பேசும் லத்தீன் அமெரிக்க மாணவர்களாலும் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. இதுபற்றி கல்வியாளர்கள் சொன்னார்கள்: ஆப்பிரிக்க கருப்பின மாணவர்களுக்கும் லத்தீன் அமெரிக்க மாணவர்களுக்கும் மெரிட் சாமர்த்தியம் இல்லை என்று சொன்னார்கள். இவர்களால் கடினமான பாடங்களை புரிந்து கொள்ளவே முடியாது என்று சொன்னார்கள்.
இந்த வகை கருத்தாக்கம் பல ஆண்டுகளாக இருந்தது. அதன் பின் ஓர் அறிவார்ந்த பேராசிரியர் திடீரென வந்தார். நான் ஒரு சோதனை செய்து பார்க்கிறேன் என்றார் அவர். ஆப்பிரிக்க கருப்பின மாணவர்கள் தேர்வு எழுதிய ஒரு கேள்வித்தாளை அவர் கேட்டு வாங்கினார். வெள்ளை அமெரிக்க மாணவர்கள் அதற்கு விடை எழுதுமாறு பணித்தார். என்ன நடந்தது தெரியுமா? வெள்ளை அமெரிக்க மாணவர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.இதிலிருந்து தெரிவது என்ன? தேர்வு முறையை யார் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அவர்கள்தான் தகுதியை முடிவு செய் கிறார்கள். உதாரணமாக உங்கள் அப்பா ஒரு விவசாயி. என்னுடைய அப்பா ஓர் அதிகாரி என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வினாத்தாளை உருவாக்கினால் நான் தோல்வி அடைவேன். நான் வினாத் தாளை உருவாக்கினால் நீங்கள் நிச்சயம் தோல்வி அடைவீர்கள். யார் தகுதி உள்ளவர் என்பது இங்கே அதிகாரத்தில் உள்ளவர்களால் தீர்மானிக்கப்பட்டு வந்துள்ளது.
நமது நாட்டில் அய்.அய்.டி. தேர்வுக்கான வினாத்தாளை வடிவமைப்பவர்கள் அனைவரும் உயர் ஜாதியினர். அதனால் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் தோல்வியடைகின்றனர். இப்போது ஒரு மாற்றம் செய்து பார்ப்போம். அய்.அய்.டி. தேர்வுக்கான வினாத்தாளை தாழ்த்தப்பட்ட மக்கள் வடிவமைக்கட்டும்; ஆம். இதை நாம் நிச்சயமாக முயற்சி செய்து பார்ப்போம்; ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று நான் பேசுவதே இந்த சமூக நீதிக்காகத்தான்.” (4.5.2024 சமூக வலைத்தளப் பதிவு)
‘மார்க்’குதான் தகுதி திறமைக்கு அளவுகோல் என்று கூறுவோருக்கு, இராகுல் காந்தியின் இந்தப் பதிவு சரியான பதிலடியாகும்.
“1967ஆம் ஆண்டில் தந்தை பெரியார் மார்க் – தகுதி – திறமை பற்றிக் கூறிய கருத்து இதோ:
“100க்கு 60 மார்க் சர்டிபிகேட் மார்க் என்பதை எதிர்பார்க்காமல் சேர்க்கப்பட்ட பிள்ளைகளில் எத்தனைப் பேர் தொழில் (Engineering) படிப்பில் ஃபெயில் (Fail) ஆனார்கள்? பாஸ் செய்து தொழிலில் ஈடுபட்டபின் தொழிலுக்குத் தகுதி அற்றவர்கள் என்று எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டார்கள்? குற்றங் கூறப்பட்டார்கள்? ‘கண்டெம்’ (Condemn) (நீக்குதல்) செய்யப்பட்டார்கள்?”
(‘விடுதலை’ 11.5.1967)
இன்னொன்றையும் தந்தை பெரியார் கூறியிருப்பது – கூர்மையானது – கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கது.
“தகுதி – திறமையை வளர்த்துக் கொள்வதற்குத் தானே கல்விக் கூடங்களுக்குச் செல்கின்றனர்; அந்தக் கல்விக் கூடங்களுக்குச் செல்லுவதற்கே தகுதி – திறமை வேண்டு மென்றால் அது எப்படி நியாயமானதாகும்?” என்ற அறிவார்ந்த – நாணயமான கேள்விக்குப் பதில் என்ன?
எந்தக் காங்கிரசை விட்டு, சமூகநீதிப் பிரச்சினைக்காக தந்தை பெரியார் வெளியேறினாரோ, அந்தப் பிரச் சினையை ஏற்றுக் கொண்டு, காங்கிரஸ் செயல்படுத்த முன் வந்திருப்பது – வரவேற்கத்தக்கதும், பாராட்டத்தக்கதுமாகும்.