பங்குச் சந்தை பெரும் சரிவு! மோடி ஆட்சியில் ரூ.7 லட்சத்து 62 ஆயிரம் கோடி இழப்பு!

Viduthalai
4 Min Read

சென்னை, மே 13 மோடி அரசு மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்று பங்குச்சந்தையைக் கணிக்கக் கூடிய பெரும் நிறுவனங்களே வெளிப் படையாகப் பேச ஆரம்பித்துள்ளன.
கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியப் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது பிஎஸ்எக்ஸ் (Bombay stock exchange) இல் கிட்டத்தட்ட 1062 புள்ளிகள் சரிந்துள்ளது. இது மிகப்பெரிய சரிவு என்று சொல்கிறார்கள். இதைப் போலவே என்.எஸ்.சியிலும் வீழ்ச்சியைச் சந்துள்ளது பங்குச்சந்தை.
இந்த ஒரு நாள் சரிவுக்கே இந்தியப் பங்குச் சந்தைக்கு ரூ.7 லட்சத்து 62 ஆயிரம் கோடி இழப்பு உண்டாகி உள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான பங்குதாரர்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளனர்.

இந்த வீழ்ச்சிக்கு முதல் காரணம், தேர்தல். அடுத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (foreign institutional investors). இவர்கள் தங்களின் முதலீட்டை இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் செல்ல உள்ளனர் என்பதால் இந்த வீழ்ச்சி என்றும் கூறப்படுகிறது.
முதலில் தேர்தல் எப்படி இந்தப் பங்குச்சந்தையைப் பாதித்துள்ளது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். அதாவது மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தல்களில் வாக்கு சதவிகிதம் என்பது மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. அதாவது மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வரவில்லை.
இந்தக் காரணி கூட இந்தியப் பங்குச்சந்தையைப் பாதித்துள்ளது. அது எப்படி? அது அப்படித்தான். நாட்டில் நடக்கின்ற ஒவ்வொரு அசைவுகள் கூட பங்குச் சந் தையைப் பாதிக்கும். புதிய ஆட்சியை ஒரு நாடு சந்திக்க உள்ளது என்றால் பங்குச் சந்தை பாதிக்கும். உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லாத சூழலால் வர்த்தகம் தேக்கம் அடையும் போதுகூட பங்குச்சந்தை பாதிக்கும்.

ஒரு அயல் நாட்டுடன் உறவு முறிவு ஏற்படும் போது, அரசியல் ரீதியான மோதல் உருவாகும் போது கூட பங்குச்சந்தை வீழ்ச்சி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அப்படித்தான் தேர்தல். கடந்த 10 ஆண்டுகளாகவே பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் முடிந்து மூன்றாவது முறையாக மோடியே பிரதமராக வருவார் என்றே பாஜக பிரச்சாரத்தை வலுவாகக் கட்டமைத்து வந்தது.
அந்த எண்ணத்தில் இப்போது ஓட்டை விழுந்துள்ளது. பாஜகவை ஆதரித்து மக்கள் வாக்களிக்க இந்த 2024 மக்களவைத் தேர்தலில் முன்வரவில்லை. அதனால்தான் வாக்கு சதவிகிதம் வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது.

மக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் முன்வந்து வாக்களிக்கிறார்கள் என்றால், அப்போது ஆளும் அரசு மீது கோபமாக உள்ளார்கள் என்பதாகப் பொருள் கொள்ளலாம். அதே ஆர்வம் காட்டாமல் சோர்விலிருந்தால், மக்களுக்கு அந்த ஆட்சி மீது மிகப்பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. வெறுத்துப் போய் உள்ளனர் என்பதாகப் பொருள் கொள்ள முடியும்.
இப்போது ஏற்பட்டுள்ள வாக்கு சதவீத வீழ்ச்சி மோடி அரசு தொடர்வதில் சிக்கல் இருப்பதை மறை முகமாக உணர்த்தியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் 2019 போல் மோடி அலை என்பது வீசவில்லை என்றே அர்த்தம். அதன் பொருட்டுதான் பங்குச்சந்தை வீழ்ச் சியைச் சந்தித்துள்ளது என்கிறார்கள் பங்குச்சந்தை வல்லுநர்கள்.

குறிப்பாக 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாஜக அரசு பெரும் செல்வந்தர்களுக்கு ஏற்ற மாதிரிதான் ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கையை வகுத்தது. அப்படி தொழிலதிபர்களுக்கு இழப்பு ஏற்படும்போது, அவர் களைக் காப்பாற்றுவதற்காகக் கடன் தள்ளுபடி சலு கைகளை அறிவித்தது.
ஆகவேதான் இந்தப் பாஜக அரசும் பொருளாதார கொள்கையை ராகுல்காந்தி ‘குரோனி முதலாளித்துவம்’ (Crony capitalism) என்று விமர்சித்து வந்தார். அதாவது அம்பானி, அதானி போன்ற ஒரு சில பணக்காரர்கள் வாழ்வதற்காக ஏற்ற பொருளாதார சூழலை உண்டாகிக் கொடுப்பது.

அந்த வரிசையில்தான் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போட்டு கரோனா கொள்ளை நோய் காலத்தில் மக்கள் முடங்கி நின்றபோது, அவர்களின் வாழ்வா தாரத்தைக் காப்பாற்ற உதவித்தொகையைப் பணமாக நேரடியாக வழங்க வேண்டும் என்று பல கட்சிகள் வலியுறுத்தினர்.
ஆனால், அதற்கு மாறாகத் தொழில்முனைவோருக்குக் கடன் கொடுப்பதன் மூலம் இந்த நெருக்கடியைச் சமாளிக்கலாம் என்று பலருக்குக் கோடிக்கணக்கில் கடன்கள் வழங்கப்பட்டன.
நுகர்வோரே இல்லாத காலத்தில் ஒரு தொழிலை மேற்கொண்டால், எப்படி வளர்ச்சி பெறும்? அந்தச் சேவை யாருக்குப் போய்ச் சேரும்? வாங்கும் சக்தி இல்லாமல் மக்கள் முடங்கி உள்ளபோது, உற்பத்தியைப் பெருக்குவதால் என்ன லாபம் என பல்வேறு பொருளாதார அறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆனால் அதை எல்லாம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணக்கில் கொள்ளவே இல்லை என்ற குற்றச்சாட்டுப் பரவலாகச் சொல்லப்பட்டது.

இதுதான் பாஜக அரசு மீது மோடியை வைத்து மிகப் பெரிய விமர்சனம். அதன் தொடர்ச்சியாகத்தான் இப் போது மோடி, ‘அம்பானியும் அதானியும் டெம்போவில் காங்கிரஸ் கட்சிக்குக் கறுப்புப் பணத்தை அனுப்பி உள்ளதாக’ குற்றம் சாட்டுவதற்கான மூல காரணம்.
இந்தியச் சந்தை நிலவரத்தை உற்று ஊகிக்கக் கூடிய ‘பிலிப்ஸ் கேப்பிட்டால்’ (Phillip Capital) சில தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில், இந்த வாக்கு சதவிகித குறைவு பங்குச் சந்தையில் மாற்றத்தை உண்டாக்கி உள்ளது.
அதாவது பாஜக பேசி வருவதைப் போல 400க்கும் மேலான இடங்களைப் பெறுவோம் என்பது சாத்தியமே இல்லை என்றும். அது ஒரு கெட்ட வாய்ப்பாக மாறி உள்ளது என்றும் கணித்துக் கூறியுள்ளது.
ஆனால், தேர்தல் வெற்றியை எடைபோடுவதில் நாங்கள் வல்லுநர்கள் இல்லை. ஒருவேளை என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற்றால், இந்தியப் பங்குச்சந்தை கட்டாயம் வளர்ச்சியைச் சந்திக்கும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *