வெள்ள நிவாரணம் கோரி தொடுக்கப்பட்ட வழக்கு அவசரமாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு

viduthalai
3 Min Read

புதுடில்லி, மே.7- ரூ.38 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை, அவசரமாக விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

ரூ.38 ஆயிரம் கோடி நிவாரணம்

தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், வழக்குரைஞர் டி.குமணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாட்டில் புயல் பாதித்த மாவட்டங்களை ஒன்றிய குழு கடந்த டிசம்பர் மாதம் பார்வையிட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்த பிறகும் தமிழ்நாட்டுக்கு உரிய வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு தரவில்லை. ஒன்றிய அரசின் இந்த போக்கு மாநில அரசின் அடிப்படை உரிமைக்கு எதிராகவும், மீறும் வகையிலும் உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக் ஜாம் புயல் மற்றும் மழை வெள்ள சேதத்துக்கு ரூ.37 ஆயிரத்து 907 கோடி நிவாரணத் தொகையை உரிய நேரத்தில் பரிசீலித்து வழங்குவதற்கு ஒன்றிய அரசுக்கும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு கூறுவதற்குமுன், வெள்ள நிவாரண மீட்புப் பணிகளுக்காக நிதி ஒதுக்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் எழுதிய கடிதங்களின் அடிப்படையில் இடைக்காலமாக ரூ.2 ஆயிரம் கோடியை வழங்க ஒன்றிய அரசுக்கும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் அவர்களின் வாதங் களைக் கேட்காமலேயே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

அவசரமாக விசாரிக்க மனு
இதனிடையே, தமிழ்நாடு அரசின் இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று (6.5.2024) முறையிட்டார்.
மனுவை விசாரணைக்கு பட் டியலிடுவது குறித்து ஆராயப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

காலை உணவு திட்டத்துக்கு பிறகு
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
மார்க்சிஸ்ட் தலைவர் பாராட்டு

இந்தியா, தமிழ்நாடு

சென்னை, மே 7 காலை உணவு திட்டத்திற்கு பின் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்
ஜி.ராமகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். கார்ல் மார்க்சின் 206ஆவது பிறந்த நாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் சென்னை ஓட்டேரியில் நேற்று (6.5.2024) மாலை நடைபெற்றது.

இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. உலகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழக்கூடிய மக்களில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர்.
இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாவதற் கான அடிப்படை காரணம் ஒன்றிய ஆட்சியாளர்கள் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள்தான். தேர்தல் காலத்தில் ஆளும் கட்சியினர் தாங்கள் செய்த சாதனைகளைக் கூறி வாக்கு கேட்பார்கள்.

ஆனால், மோடி தோல்வி பயத்தில் எதிர்க்கட்சிகளை மட்டுமே விமர்சனம் செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஒரு இடத்தில்கூட மறு பங்கீடு என்ற வார்த்தையோ, செல்வ வரி என்ற வார்த்தையோ கிடையாது.

ஆனால், இதுகுறித்து மோடி தவறான கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் உங்களிடம் இரண்டு வீடு இருந்தால் ஒரு வீட்டை எடுத்துக் கொள்வார்கள். இரண்டு மாடு இருந்தால் ஒரு மாட்டை எடுத்துக் கொள்வார்கள் என்று அபத்தமாக மோடி பேசுகிறார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக தொடர்ந்து மோடி பேசி வருகிறார். ஆனால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை. முன்பெல்லாம் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்.

தற்போது பாராட்டத்தக்க வகையில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் உள்ளது. பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வந்த பின் மாணவர்களின் சேர்க்கை விகிதம் பெருமளவு அதிகரித்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *