புதுடில்லி மே 6 நேபாள அரசு கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தை வெளியிட்டது. அதில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த லிபுலேக், கல்பானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் நேபாளத்திற்கு உட்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. நேபாளத்தின் தன்னிச்சையான இந்த முடிவை ஏற்க முடியாது என கூறியிருந்தது. இந்நிலையில், நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசந்தா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், இந்திய பகுதிகளுடன் கூடிய சர்ச்சைக்குரிய வரைபடத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஒப்புதல் தரப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகள், பழைய 100 ரூபாய் நோட்டுக்கு பதிலாக மாற்றப்படும் என நேபாள அரசு அறிவித்தது. இந்த விவகாரம் தற்போது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. இதற்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.