பெரியார் பிஞ்சு பழகு முகாம் 3 ஆம் நாள்: பெரியார் பிஞ்சுகளின் மேடையேறும் தயக்கத்தை சுக்கு நூறாக நொறுக்கிய துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனின் கொள்கை வகுப்பு!

viduthalai
6 Min Read

வல்லம், மே 2 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) நிறுவனம், ‘பெரியார் பிஞ்சு’ மாத இதழ் இணைந்து நடத்தும் பழகு முகாம் நிகழ்ச்சியின் மூன்றாம் நாளில் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் கலந்துகொண்டு கொள்கை வகுப்பெடுத்தார்.

திராவிடர் கழகம்

இரண்டாம் கட்டமாக 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வரும் பெரியார் பிஞ்சுகளுக் கான ‘பழகு முகாம்’, இந்த ஆண்டு ஏப்.28 முதல் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று (மே 2) வரை நடைபெறும் இந்நிகழ்வின் மூன்றாம் நாளில் மற்ற இரண்டு நாள்களைப் போலவே அடர்த்தியான பயனுள்ள வகுப்புகள் நடைபெற்றன.

பறவைகளுடன் போட்டியிடும் பிஞ்சுகள்!

பறவைகள் கூட 5.30 மணிக்கு மேல்தான் விடியலைக் கொண்டாடுகின்றன. ஆனால் பிஞ்சுகள் காலை 5 மணிக்கே எழுந்து தயாராகி, பிஸ்கட்டுடன் பாலும், தேநீ ரும், போன்றவற்றை பருகி நடைபயிற்சிக்குத் தயாராகி விடுகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மூங் கில் காடு உள்பட பல்வேறு பகுதிகளில் நடைப்பயிற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிகழ்வுக்கு உடற் கல்வி இயக்குநர் முனைவர் ரமேஷ் பொறுப்பேற்று, பிஞ்சுகளை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து வழி நடத்திச் செல்கிறார். மூன்றாம் நாளான 30.04.2024 அன்று தொண் டறச் செம்மல் சொர்ணா ரங்கநாதன் விடுதியிலிருந்து புறப்பட்டு, மற்றொருமொரு தொண்டறச் செம்மலான புலவர் இமயவரம்பன் தோட்டம், அறிவு மய்யம் வழியாக வளாகத்தின் முதன்மைச் சாலையில் இணைந்து, தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் சிலைகளாக வீற்றிருக்கும் முதன்மை வாசலுக்கு வந்து சேர்ந்தனர். அங்கே பிஞ்சுகள், ஒருங்கிணைப்பாளர் அனைவரும் இணைந்த குழு படம் ஒன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. பிஞ்சுகளுடன் பழகுவதே சிறப்பு. அதிலும் நடைப்பயிற்சி செல்லும் போது ஏற்படும் அனுபவம் தனிச்சிறப்பு! அதே முதன்மைச் சாலை வழியாக உள்விளையாட்டரங்க வாசலுக்கு நடை ஓட்டமாக பிஞ்சுகள் அழைத்து வரப் பட்டனர். அங்கே கராத்தே, சிலம்பம், யோகா வகுப்பு களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு, முனைவர் ரமேஷ் அவர்களின் மேற்பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டனர். கராத்தே ஆசிரியர் எட்வின், சிலம்பம் ஆசிரியர் அய்யப்பன், யோகா ஆசிரியர் ராஜேஷ்வரி, கவிதா ராமநாதன் ஆகியோரால் வகுப்புகள் சிறப்பாகக் கற்பிக்கப்பட்டன.

திராவிடர் கழகம்

பிஞ்சுகளுக்கு மருத்துவப் பரிசோதனை!

முதல் வகுப்பாக அறிவு மய்யம் வளாகத்திலுள்ள பெரியார் உயராய்வு மய்யம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அருங்காட்சியகம், ஹியூமனாய்டு ரோபோட்டிக்ஸ், நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டு மீண்டும் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் அரங்கிற்குத் திரும்பினர். முன்னதில் பேராசிரியர் நம்.சீனிவாசன், பின்னதில் ரோபோடிக்ஸ் பாட இயக்குநர் ராஜேஷ் ஆகியோர் பிஞ்சுகளுக்குப் பாடம் நடத்தினர். அடுத்ததாக பல், கண் பரிசோதனை செய்யும் வகுப்பாக நடைபெற்றது. கண் பரிசோதனைக்கு மேக்ஸ்விசன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி சார்பில் மைலேஸ்வரன், தாரணி ஆகியோரும், பல் பரிசோதனை செய்ய மருத்துவர் அபிராமி, வாசுகி ஆகியோரும் வந்திருந்து பிஞ்சுகள் அனைவருக்கும் தக்க ஆலோசனைகள் வழங்கினர். முன்னதாக கண், பல் ஆகிய இரண்டு பற்றியும் பிஞ்சுகளுக்கு புரியும்படியான ஒரு கருத்துரை வழங்கப்பட்டது.

அரங்கத்தை அதிர வைத்த
கலைவாணன் வகுப்பு!

மூன்றாம் வகுப்பாக பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணன் நூலகத்தின் அவசியம் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடியபடியே வகுப்பெடுத்தார். தொடர்ந்து சிங்கம், நரி, கழுதை மூன்றையும் வைத்து ஒரு கதையை பிஞ்சுகள் வெடித்துச் சிரிக்கும் படியாக சொன்னார். 10 ஆண்டுகளாக காட்டை ஆளுகின்ற ஒரு சிங்கம் எப்படி நரியை மிரட்டி, கழுதையை ஏமாற்றி அடித்துக் கொன்றது என்பதுதான் கதையின் சுருக்கம். கதையின் இறுதியில் சிங்கம், நரி, கழுதை இந்த மூன்றையும் இன்றைய காலகட்டத்தில் யாரோடு ஒப்பிடலாம் என்று கேட்டார். பதில் சொல்ல நான், நீ என்று போட்டி போட்டனர். அதில் செம்மொழி என்ற பிஞ்சு ’பிரதமர் மோடி’ தான் சிங்கம் என்று சொல்லி, அரங்கத்தையே அதிர வைத்துவிட்டார்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையும், பிஞ்சுகளும்!

திராவிடர் கழகம்

மதிய உணவுக்குப் பின்னர் அறிவு மய்யம் வளாகத்தின் வாசலில் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் பிஞ்சுகளுடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். அடுத்து நான்காம் வகுப்பாக உள் விளையாட்டரங்கத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை செய்வது எப்படி? என்ற செயல்முறை வகுப்பு நடைபெற்றது. இதில் மூன்று தலைமுறைகளாக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை உருவாக்கி மொத்த விற்பனை செய்துவரும் பாலு, மணிகண்டன் ஆகியோர் செய்து காட்டினர். தொடர்ந்து அய்ந்து குழுவினருக்கும் அந்த கலவை கொடுக்கப்பட்டு, அந்த பொம்மை செய்து பார்ப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அய்ந்தாம் வகுப்பாக மனநல ஆலோசகர் லில்லி புஷ்பம் பிஞ்சுகளுக்கு நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து வகுப்பெடுத்தார். ஆறாம் வகுப்பாக வெளி விளையாட்டரங்கில் பிஞ்சுகள் அவரவர்க்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடும் படியாக அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இவ்வகுப்பை உடற்கல்வி இயக்குநர் முனைவர் ரமேஷ் ஒருங்கிணைத்தார். 5.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராமச்சந்திரன், பேராசிரியர் பர்வின் ஆகியோர் வருகை தந்து பழகு முகாமை பார்வையிட்டனர்.

தயக்கங்களை உடைத்தெறிந்த
துணைத் தலைவர்!

திராவிடர் கழகம்

அதைத் தொடர்ந்து திறந்தவெளி அரங்கமான முத்தமிழ் அரங்கத்தில் பிஞ்சுகள் அமர வைக்கப்பட்டனர். துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் வகுப்பெடுத்தார். அவர் தனது வகுப்பை இரண்டாகப் பிரித்துக் கொண்டு, விடுகதைகள், பொது அறிவு போன்றவற்றை கேள்வி, பதில் முறையில் பிஞ்சுகளுடன் கலந்துரையாடும் படியாக அமைத்துக் கொண்டு அதிலேயே தீபாவளி கதை அறிவுக்கு உகந்ததா?; பிள்ளையார் பற்றிய கதையில் மிதித்தால் சாணி, கையில் பிடித்தால் சாமியா?; உருவம் இல்லாதவர் கடவுள் என்கிறார்கள். பிறகேன் கடவுளுக்கு உருவம்?; அறிவியல் நமக்கு செய்தது என்ன? கடவுள் செய்தது என்ன? என்பன போன்ற கேள்விகள் கேட்டு, பகுத்தறிவைத் தூண்டும் வகையில் உரையாற்றினார். அதோடு பிஞ்சுகளை மேடையேற்றி அவர்களையும் பேச விட்டார். கவிஞர் விடுத்த விடுகதைகள், கேள்விகள் பிஞ்சுகளுக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால், கவிஞர் இருந்த மேடையும் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக ஆகிவிட்டது. கவிஞர், “நீங்க யாராவது வந்து கேள்வி கேளுங்க” என்று சொன்னதுதான் தாமதம். படையெடுத்து விட்டார்கள். வரிசை வளர்ந்து கொண்டே இருந்தது. வந்தவர்களே கூட மீண்டும், மீண்டும் மேடையேறி ஒருங்கிணைப்பாளர்களை திக்குமுக்காடச் செய்துவிட்டனர். மேடைப் பக்கம் கடந்த இரண்டு நாள்கள் எட்டிக்கூட பார்க்காத பிஞ்சுகளும் சரசரவென்று மேடையேறி தங்கள் கேள்வியையோ, விடுகதையையோ சொல்லியும், விடுத்தும் பதில் கிடைத்தால் மகிழ்ந்தும், இல்லையென்றால் தாங்களே பதிலளித்தும் குதூகலப்பட்டுக்கொண்டனர். இப்படியாக கவிஞர் வகுப்பு பிஞ்சுகளின் மேடையேறும் தயக்கத்தை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கி விட்டது. 1.30 மணி நேரம் கவிஞர் வகுப்பு நடைபெற்றது.

பிஞ்சுகளின் உள்ளக்கிடக்கை என்ன?

இரவு உணவுக்குப் பிறகு அவரவர் அறைகளில் தங்களுக்கான பணிகளை செய்து முடித்த பிறகு, அரட்டைகள் தொடர்ந்தன. பழகு முகாமில் என்னென்ன உணவுகள் பரிமாறப்படப் போகின்றன என்பது மாணவர்களின் பார்வையில் படும்படி வைத்திருப்பார்கள். ஆனால் என்னென்ன வகுப்புகள் என்று அவர்களுக்குத் தெரியாது. ஒருங்கிணைப்பாளர்களிடம் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். வீட்டில் அதிகாலை 5 மணிக்கு எழுந்து பழக்கம் இல்லாததாலும், விடுமுறையில் நேரத்தை வெறுமனே போக்கிக் கொண்டிருந்து விட்டதாலும் வகுப்புகளுக்கிடையே கூட ஓய்வு இல்லையே என்று தனது புதிய நண்பர்களுடனும், சில சமயம் நெருக்கமாகக் கருதும் ஒருங்கிணைப்பாளர்களிடமும் அலுப்புடன் பகிர்ந்து கொள்வார்கள். இதையெல்லாம் சிலர் வீட்டுப் பாடத்திலும் எழுதப் போகிறோம் என்றும் ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒழுங்கு காட்டுவார்கள். இன்னொன்று ‘நீச்சல் குளத்திற்கு எப்போது போகப்போகிறோம்’ என்று சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நான்காம் நாள் (1.5.2024) செல்லப் போகிறோம் என்று அறிவிப்பு செய்யப்பட்டு விட்டது. இதுவும் வழக்கமான நீச்சல் குளம் இல்லையென்றும் சொல்லிவிட்டதால், ஒருங்கிணைப்பாளர்களை அது என்ன? என்ன? நச்சரித்து விட்டார்கள். வீட்டுக்கு பேசும் போது, “சூப்பரா இருந்துச்சு! நன்றாக சாப்பிட்டேன்! நன்றாக இருக்கிறேன்!” என்றே பதிலளித்துக் கொண்டிருந்தனர். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் பேச தவித்துக் கொண்டிருந்தனர். பேசியதும் சமாதானமாகி விட்டனர். சில பெரியார் பிஞ்சுகள் வீட்டுக்குப் போய் மொத்தமாக பேசிக்கொள்ளலாம் என்று பேசுவதைத் தவிர்த்து விட்டு, புதிய புதிய நண்பர்களிடம் சள, சள வென்று பேசிக்கொண்டே இருந்தனர். நாளைக்கு 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். விரைவில் படுத்து உறங்குங்கள் என்று ஒருங்கிணைப்பாளர்கள் சொன்னாலும், “அதெல்லாம் எழுந்துவிடுவோம்” என்று பதில் கொடுத்துவிட்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த அரட்டையைத் தொடர்ந்தனர். எப்போது உறங்கினார்கள் என்பது அவர்களுடைய அறையில் இருக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்குத் தான் தெரியும். இப்படித்தான் பழகு முகாமின் மூன்றாம் நாள் கடந்ததே தெரியாமல் முடிந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *