அய்தராபாத், ஏப்.20- அய்தராபாத்தில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுபவர் மாதவி லதா. தெலங்கானாவில் வரும் மே 13ஆ ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடு பட்டுள்ளன. இந்த நிலையில், அய்தர பாத்தில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் பா.ஜனதா வேட்பாளர் பங்கேற்றார். அப்போது மசூதி ஒன்றின் அருகே வந்த போது, கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல பாவனை செய்த மாதவி லதா அதனை தொலைவிலிருக்கும் இலக்கு நோக்கி எய்வது போல காட்டினார். இந்த காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது.
இதையடுத்து, அய்தராபாத்தின் பா.ஜனதா வேட்பாளருக்கு எதிராக கண்டனங்கள் குவித்தன.
இதனையடுத்து, இந்த செய்கை மற்றும் வைரல் காட்சிப் பதிவு குறித்து விளக்கமளித்த மாதவி லதா, மன்னிப்பும் கோரியிருக்கிறார்.
“அது முழுமை பெறாத காட்சிப் பதிவு ஒன்றின் சிறு பகுதி மட்டுமே. அந்த வகையில் தவறாக பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. அனைத்து தரப்பினரையும் நான் மதிக்கிறேன். எனினும் எவருடைய உணர்வுகளை யேனும் எனது செய்கை புண்படுத்தி யிருப்பின் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்” என்று விளக்கி உள்ளார்.