சென்னை, ஏப்.20- சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று (19.4.2024) காலை 8.45 மணியளவில் தன்னுடைய தாயார் ராசாத்தி அம்மாள் உடன் வந்து தம்முடைய வாக்கினைப் பதிவு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய தேர்தல். அரசியல் சாசனத்தை காக்க வேண்டும் என்ற தெளிவோடு மக்கள் வந்து வாக்களிக்க வேண்டும். முதலமைச்சர் கூறியபடி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க. கூட்டணியை எதிர்க்கும் அளவிற்கு பா.ஜனதாவினர் களத்திலேயே இல்லை’ என்றார்.
40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்கு வெற்றி
ப.சிதம்பரம் உறுதி
சிவகங்கை,ஏப்.20- தமிழ்நாடு – புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அடனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் சிட்டாள் ஆச்சி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மய்யத்தில் ப.சிதம்பரம் நேற்று (19.4.2024) வாக்களித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படும். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை, நாங்கள் சீர்செய்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளம் இங்கேதான்
கே.எம்.காதர் மொகிதீன்
திருச்சி, ஏப்.20- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் திருச்சி காஜாமியான் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க, அரசமைப்புச் சட்டத்தை உறுதிப்படுத்த, மதச் சார்பின்மையைக் கடைப்பிடிக்கும் ஆட்சி அமையும். தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, தேசிய அளவில் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளத்தை அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ மாணவர்களின் ஊக்கத் தொகை
விவரங்கள் வழங்க உத்தரவு
சென்னை, ஏப்.20- தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்ட செய்திக்குறிப்பு. மருத்துவ மாணவர்களுக்கான ஊக்கத் தொகை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்தை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் வழங்கும் ஊக்கத் தொகை விவரங்களை வரும் 23ஆம் தேதிக்குள்[email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.