சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கி 167 ஆண்டுகள் முடியப் போகிறது. தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்குத் தாய் பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகும்.
உலகப் புகழ் பெற்ற பல அறிவியல் அறிஞர்களையும், சாதனைகள் பல படைத்த பல பேராசிரியர்களையும் ஆய்வாளர்களையும் தனது நீண்ட நெடிய கல்வி ஆய்வு பயணத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
பல இலட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பெருமை சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
இன்றும் பல நிதிச் சிக்கல்களுக்கு இடையே பல்கலைக்கழகத்தின் கல்விப் பணி தொடர்கிறது.
வருமான வரித்துறை வங்கிக் கணக்கை முடக்குகிற அளவிற்குப் பல்கலைக்கழகம் வருமான வரி ஏய்ப்பு செய்யவில்லை.
வருமான வரிச் சட்டப் பிரிவின் கீழ்ச் சென்னைப் பல்கலைக்கழகத்தை ஒரு முதலாளித்துவ நிறுவனமாக வரைமுறை செய்து கடந்த ஆண்டுகளில் பல முறை வருமான வரியைக் கட்டச் சொல்லித் தாக்கீதுகளை வருமான வரித்துறை அனுப்பியுள்ளது.
இதற்கான உரியப் பதில்களைப் பல்கலைக் கழகம் அளித்துள்ளது.
இது போதாது என்று பல இலட்சம் ரூபாய் சரக்கு சேவை வரியையும் கட்ட தாக்கீதுகள் ஒன்றிய அரசால் அனுப்பப்படுகின்றன.
இது ஒரு தனியார் நிறுவனம் என்று பல்கலைக்கழகத்தை வருமான வரித்துறை கருதினால்,
எப்படி ஒன்றிய அரசு ஆளுநரைச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகத் தொடர அனுமதி அளிக்கிறது?
அதிகாரக் குவியலின் உச்சத்தில் இருக்கும் ஒன்றிய அரசின் அடாவடித்தனம் தான் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வங்கிக் கணக்கை முடக்கிய செயல் ஆகும்.
2018 இல் வெளிநாட்டிற்குத் தப்பித்து ஓடிப் போன பொருளாதாரக் குற்றவாளி நீரவ் மோடியா சென்னைப் பல்கலைக்கழகம்?
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் உயர் கல்வி நிலையங்களான அய்.அய்.டி போன்ற அமைப்புகளுக்கு ஏன் எந்த வரியும் விதிப்பதில்லை?
இதே போன்று தான் சென்னைப் பல்கலைக்கழகமும் ஓர் உயர் கல்வி அமைப்பு.
அப்படி என்றால் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கை முடக்க யார் தூண்டினார்கள்?
தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்குத் தாய் பல்கலைக்கழகமான தமிழ்நாட்டின் சென்னைப் பல்கலைக்கழகத்தை அவமதிப்பிற்குட்படுத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.
உடனே பதவி விலக வேண்டும்.