மீன்பிடி தடைக்காலத்தில் முதலமைச்சர் உயர்த்திய நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் கிடைத்ததில் மகிழ்ச்சி: மீனவர்கள் நெகிழ்ச்சி

Viduthalai
2 Min Read

ராமேஸ்வரம், ஏப்.19 மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் உடனே கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் தற்போது அமலில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் வாழ்வாதாரமின்றி மிகுந்த சிரமம் அடைந்து வருவர். கடந்த காலங்களில் மீனவர்களுக்கான தடைக்கால நிவாரண நிதி ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடைக்கால நிவாரண நிதி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி தடைக்காலம் துவங்கிய முதல் வாரத்திலேயே நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் நேற்று (18.4.2024) மீனவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தடைக்காலம் துவங்கிய சில நாட் களிலேயே நிவாரண நிதி கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீனவர்களின் வாழ்வா தாரத்தை கருத்தில் கொண்டு ரூ.8 ஆயிரமாக நிவாரண நிதியை உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு ராமேஸ்வரம் தீவு மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

மின் நுகர்வு ஏப்ரல் 17இல்
புதிய உச்சம் : 442.74 மி.யூனிட்
சென்னை, ஏப்.19 தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் மின் தேவை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்.20ஆம் தேதி மாநிலத்தின் அதிகபட்ச மின் நுகர்வு 423.785 மில்லியன் யூனிட்டாக இருந்தது. இந்த ஆண்டு கடந்த மார்ச் 20ஆம் தேதியே 423.79 மில்லியன் யூனிட் பதிவாகி கடந்த ஆண்டின் உச்ச அளவை கடந்தது.
தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மார்ச் 26ஆம் தேதி 426.44 மி.யூ., ஏப்.2ஆம் தேதி 430.13மி.யூ., ஏப்.3ஆம் தேதி 435.85மி.யூ., ஏப்.4ஆம் தேதி 440.89மி.யூ., ஏப்.5ம் தேதி 441.18மி.யூ. என்ற அளவுகளில் மின்சார பயன்பாடு இருந்தது. தற் போது இந்த அளவுகளையும் கடந்து புதிய உச்சத்தை மின் வாரியம் எட்டியுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் (17.4.2024) மின் பயன்பாடு 442.71 மில்லியன் யூனிட்டாக பதிவானது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், நம் மாநிலத்தின் மின் பயன்பாடு புதிய உச்சமாக நேற்று முன்தினம் (ஏப்.17ம் தேதி) 442.74 மில்லியன் யூனிட்டை தொட்டது. இதற்கு முன்பு கடந்த ஏப்.5ஆம் தேதி பதிவான 441.18 மி.யூ. அதிகபட்சம் மின் நுகர்வாக இருந்தது. எனினும் சீரான மின் விநி யோகத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் உறுதி செய்தது என கூறப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *