91 வயதிலும் துவளாது கடமையாற்றிய ஒப்பற்ற தலைவர்

Viduthalai
4 Min Read

இம்மாதம் 2ஆம் தேதி தென்காசியில் தொடங்கிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணம் நேற்று (17.4.2024) மாலை
தஞ்சாவூரில் நிறைவு பெற்றது.
இந்தப் பயணத்தில் இரண்டரை ஆண்டு திராவிட மாடல் ஆட்சியாம் தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்து வைத்தார். நூற்றாண்டு காணும் திராவிட இயக்க வரலாற்றுச் சாதனைகளையும், கல்வெட்டாகப் பொறித்தார்.
10 ஆண்டு காலம் இந்திய ஒன்றியத்தில் ஆட்சி புரிந்த நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியின் அவலங் களைத் தோலுரித்துத் தொங்க விட்டார்.
சமூகநீதியில் ஒன்றிய பி.ஜே.பி. அரசு ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு எதிராக மேற்கொண்ட மோசடிகளை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினார்.

ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்றிய பி.ஜே.பி. அரசு என்பது உயர் ஜாதி மேலாதிக்க நோக்கம் கொண்டது என்பதை எடுத்துரைத்தார்.
நடைபெறவிருக்கும் 18ஆவது மக்களவைத் தேர்தல் என்பது இரண்டு தத்துவங்களுக்கு – சித்தாந்தங்களுக்கு இடையே நடைபெறும் பெரும் போராட்டம் என்பதை விளக்கினார்.
காங்கிரஸ் இளந் தலைவர் இராகுல் காந்தி அவர்களே, தமிழ்நாட்டில் நடந்த தேர்தல் பரப்புரையில் திருநெல்வேலியில் ‘பெரியாருக்கும் – ஆர்.எஸ்.எஸுக்கும் இடையே நடைபெறும் போராட்டம்’ என்று கூறியதை எடுத்துக்காட்டிப் பேசினார்.
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் பொத்தென்று குதிக்கும் என்றும் பிரதமர் மோடி சொன்னதை எல்லாம் தமிழர் தலைவர் பரப்புரைப் பயணத்தில் குறிப்பிட்டுச் சொன்னபோது கைதட்டி ஆரவாரித்தனர் பொது மக்கள்!

மோடி அரசு உண்மைக்கு மாறாக பேசுவதிலும் பொய்த் தகவல்களை வாரிக் கொட்டுவதிலும் முதல் இடத்தில் இருக்கக் கூடிய வாக்கு சுத்தமில்லாத கட்சி என்றும் தார்மீகம் குறித்து எல்லாம் பிஜேபி பேசுவது என்பது ஏமாற்று வேலை என்றும் எடுத்துரைத்தார்.
பிஜேபி ஆட்சியில் தொழில்கள் நலிவடைந்ததையும் இலட்சக்கணக்கானோர் வேலையிழந்து நடுத்தெருவில் நின்றதையும் விளக்கினார்.
கரோனா காலத்தில் உச்சநீதிமன்றம் தலையில் அழுத்தமாகக் குட்டியதற்குப் பிறகே இலவச தடுப்பூசிக்கு ஏற்பாடு செய்ததையும் எடுத்துச் சொன்னபோது – மக்கள் மத்தியில் ரத்தக் கண்ணீர் வந்தது என்றே சொல்ல வேண்டும்.
கரோனா காட்டுத் தீயாகப் பரவிய கால கட்டத்தில் தமிழ் நாட்டில் வேலை செய்து கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் குழந்தைக் குட்டிகளுடன் மூட்டை முடிச்சுகளுடன் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடைப் பயணமாகச் சென்ற பரிதாபத்தை நெகிழ்ச்சியோடு ஆசிரியர் அவர்கள் எடுத்துச் சொன்னதைக் கேட்ட வாக்காளர் பெரு மக்கள் ‘இப்படியும் ஓர் இரக்கமற்ற ஆட்சியா?’ என்று கண்ணீர் மல்கினர்.

சாதனை வீரராக மார்தட்டும் 56 அங்குல மார்பளவு கொண்டதாகத் தம்மைப் பற்றி வருணித்துக் கொள்ளும் மோடியின் ஆட்சியில் விலைவாசி ஏற்றம் விண்ணை முட்டியதை விளக்கினார்.
2014இல் மோடி ஆட்சிக்கு வந்தபோது சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.440; ஆனால் மோடி ஆட்சியில் அதிரடியாக ரூபாய் 818க்கு உயர்ந்ததைச் சொன்னபோது தாய்மார்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
2014 காங்கிரசின் மன்மோகன்சிங் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.66.37; மோடி ஆட்சிக்குவந்தபின் இன்றைய நிலையில் ரூ.100.75.

டீசல் விலையும் ரூ.53.38லிருந்து பிஜேபி – மோடி ஆட்சியில் ரூ.92.44 என்ற உயரத்தைத் தாண்டியது.
பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் விலைவாசிகள் விறுவிறு என்று ஏறுமுகத்தில் பயணிக்கும் என்ற பொருளா தாரம் குறித்து (ஆசிரியர் பொருளாதார பட்டதாரி ஆயிற்றே – அதில் தங்க மெடல் பெற்றவராயிற்றே!) பாடம் நடத்தினார். பரப்புரைப் பயணத்தில் எதிர்க்கட்சிகள் ஊழல் செய்பவர்கள் என்று போகுமிடமெல்லாம் பிளந்து தள்ளும் மோடி ஆட்சியில் – உலகமே கேட்டிராத பங்கு பத்திர ஊழலை – உச்சநீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி பிரச்சாரக் களத்தைக்ச் சூடாக்கினார்.
நாமெல்லாம் தேர்தல் பத்திரமாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம்; தேர்தலையே ஊழல் பத்திரமாக்கிய மோடி ஆட்சியின் மகா ஊழலை நார் நாராகக் கிழித்துத் தொங்க விட்டார் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
முக்கியமாக தி.மு.க., காங்கிரஸ், பிஜேபி தேர்தல் அறிக்கைகளை எடுத்துக்காட்டி, எந்த அறிக்கை நாட்டு மக்களுக்கு நன்மை விளைவிக்கக் கூடியது என்பதை ஆதாரப் பூர்வமாக விளக்கினார்.
குறிப்பாக பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் ஏதாவது ஒரே ஓர் இடத்திலாவது “சமூக நீதி” என்ற சொல் இடம் பெற்றி ருக்கிறதா? என்ற கேள்வி பிரச்சாரத்தின் உச்சம். தஞ்சை நிறைவுப் பிரச்சாரக் கூட்டத்தில் இதனை ஒரு கேள்வியாக எழுப்பினார்.

கழகம் வெளியிட்ட நான்கு நூல்கள் தேர்தல் களத்தில் பேசு பொருளாகி விட்டன.
இந்தியாவிலே நடைபெற்ற 18 தேர்தல்களிலும் (மாணவர் பருவந்தொட்டு) தேர்தல் பரப்புரை செய்த ஒரே தலைவர் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான்.
இந்தத் தேர்தலில் “இண்டியா கூட்டணி” தான் வெல்லும் என்று ஆரம்பத்திலேயே அடித்துச் சொன்ன தலைவர் நமது ஆசிரியர். அது உண்மையே என்று இப்பொழுது எல்லோரும் கணித்துச் சொல்ல – எழுத ஆரம்பித்து விட்டனர்.
இந்தத் தேர்தல் பரப்புரைப் பயணத்தில் இரவும் – பகலுமாக உடனிருந்து ஒத்துழைத்த – ஏற்பாடுகளைச் செவ்வனவே செய்த கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

ஆங்காங்கே ஆசிரியர் அவர்களின் தேர்தல் பரப்புரைக்கு ஒத்துழைப்புக் கொடுத்த “இண்டியா” கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் போற்றத் தகுந்தவர்கள்.
91 வயதிலும் வாகை சூடுகிறார் நமது தலைவர்.
இடைஇடையே உடல் நலம் ஒத்துழைக்க மறுத்தாலும் ஊர் நலம் தான் முக்கியம் என்று உழைத்த – தந்தை பெரியாரின் தத்துவ வாரிசாம் நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் தம் பொது வாழ்விலே மேலும் ஒரு வைரக் கல்லைப் பொறித்து விட்டார்.
நாடு வாழ அவர் நீண்ட நாள் வாழட்டும்!
வாழ்க பெரியார்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *