புதுச்சேரி,ஏப்.17- புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடித் துள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணிக் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
பிரச்சார பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-
பாஜக தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. ஒன்றிய பாஜக அரசு புதுச்சேரி மக்களை புறக்கணிக்கிறது. புதுச்சேரிக்கு முழுமையான மாநிலத் தகுதி கிடைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் புதுச் சேரியில் மூடப்பட்ட ஆலைகள், ரேஷன்கடைகள் திறக்கப்படும்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும், முன்னேற் றத்திற்கும் நாம் பாடுபட வேண்டும். அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரிக்கு யூனியன் பிரதேச அங்கீகாரம் கொடுத்தோம். புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி கொடுப்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டது. 1950ஆம் ஆண்டின் அரசமைப்பு சட்டத்தில் கூறியபடி தான் காங்கிரஸ் கட்சியானது உள்ளது. காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை உறுதியாக நிறைவேற்றும்; மாநிலத் தகுதி பெற்றுத் தருவோம்; ஆனால் மோடியோ, ரங்கசாமியோ வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. புதுச்சேரி முதலமைச்சரை பார்த்து பரிதாபப்படுகின்றேன். அவர் பிரதமர் மோடியிடம் சரணடைந்து விட்டார்.
இந்தியா முழுவதும் சட்டமன்ற உறுப்பினர்கள் 444பேரை விலைக்கு வாங்கியவர் பிரதமர் மோடி. ஒன்றிய பாஜக அரசு சில மாநிலங்களில் தேர்தல் முறையில் ஆட்சிக்கு வராமல் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்கிறது. பாஜக கொள்கையை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொல்லை கொடுக்கும் வேலையில் பிரதமர் மோடியின் அரசு ஈடுபட்டு வருகின்றது.
பிரதமர் மோடியும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவும் சலவை இயந்திரத்தை வைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்கள் மீதும் பொய் வழக்கு போடுவது; குற்ற நிகழ்வுகளில் ஈடுபடுவோரை அரசு அமைப்புகளை கொண்டு பாஜகவிற்கு கொண்டு வருகிறார்கள். ஆளுநர்கள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கு நெருக்கடியை கொடுக்கின்றது பாஜக அரசு.
– இவ்வாறு அவர் கூறினார்.