கடந்த 12ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் இளந் தலைவர் இராகுல்காந்தி ஆற்றிய உரையும், கோவையில் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து ஆற்றிய ஆற்றொழுக்கான உரையும் ஆழமும் அர்த்தமும் நிறைந்த அரும்பெரும் தன்மையும் கொண்டவையாகும்.
அதிலும் குறிப்பாக நடக்கவிருக்கும் 18ஆவது மக்களவைத் தேர்தல் என்பது ஏதோ அய்ந்தாண்டுக்கு ஒருமுறை வழமையாக நடைபெறும் சடங்காச்சாரமான தேர்தல் அன்று. இரண்டு சித்தாந்தங்கள் – தத்துவங்களுக்கிடையே நடக்கும் போர் என்று குறிப்பிட்டதோடு நில்லாமல் – பெரியாருக்கும் – ஆர்.எஸ்.எசுக்கு மிடையே நடைபெறவிருக்கும் தேர்தல் என்று வெளிச்சமாகவே இராகுல் போட்டுடைத்தது சாதாரணமான ஒன்றல்ல. ஆர்.எஸ்.எஸ். என்றாலே பிறப்பின் அடிப்படையிலான வருணசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட – பிறப்பில் மேல்-
கீழ் என்ற ஜாதி அடிப்படையிலானது – சமூகநீதிக்கும் – சமூக அநீதிக்குமிடையிலான போராட்டமாகும்.
“ஜாதி, மாநிலம், மொழிகளின் அடிப்படையில் சிறப்புச் சலுகைகள் கேட்கப்படுகின்றன. பிற்படுத்தப்பட்டோருக்கென சலுகைகள் கேட்கப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். இதற்கொரு முடிவு கட்டும்” என்று பிஜேபியின் முன்னோடி அமைப்பான, ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த அரசியல் அமைப்பான ஜன சங்கத்தின் கொள்கை அறிக்கை பட்டவர்த்தனமாக அறிவித்ததுண்டே!
வெகு காலத்திற்கு முன்புகூட செல்ல வேண்டாம். ஆர்.எஸ்.எஸின் தலைவரான மோகன் பாகவத் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யும் காலம் வந்து விட்டது என்று கருத்துத் தெரிவிக்கவில்லையா?
ஆண்களைவிட பெண்கள் அதிகம் படித்து கை நிறைய சம்பாதிக் கிறார்கள். தங்கள் கணவன்மார்களை மதிப்பதில்லை. அத்தகை யவர்களை, விவாகரத்து செய்ய வேண்டும் என்று இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சொன்னவர் இந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்தானே.
மண்டல் குழுப் பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத்தப் பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு சட்டத்தை பிரதமராக இருந்த சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் கொண்டு வந்து – நிறைவேற்றப்பட்ட நிலையில் வெளியிலிருந்து வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த பிஜேபி – தன் ஆதரவை விலக்கிக் கொண்டு சமூகநீதிக்கான வி.பி.சிங் அவர்களின் ஆட்சியைக் கவிழ்த்தது – இதே பிஜேபி தானே!
இந்த நிலையில் சமூகநீதியைக் காங்கிரஸ் கையில் எடுத்துக் கொண்டு இருப்பது – அதன் அடிப்படையில் காங்கிரஸ் இளந் தலைவர் இராகுல் காந்தி முழக்கமிடுவது புதியதோர் திருப்பு முனையாகும்.
ஒன்றிய அரசின் செயலாளர்கள் 90 பேரில் ஓ.பி.சி.யினர் (பிற்படுத்தப்பட்டோர்) வெறும் மூன்றே மூன்று பேர்தான் என்று கேட்டதும் – செய்தியாளர்களின் சந்திப்பில், உங்களில் எத்தனைப் பேர் ஓ.பி.சியைச் சேர்ந்தவர்கள் என்று இராகுல் காந்தி கேட்டதும் மிக முக்கியமானவையாகும்.
எந்தக் காங்கிரஸ் – தந்தை பெரியார் குரல் எழுப்பிய போராடிய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை – ஏற்க மறுத்ததோ, எந்தக் கொள்கையை முன்னிறுத்தி தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினாரோ, அந்தக் காங்கிரஸ் காலம் கடந்த நிலையிலாவது – காங்கிரஸ் இளம் தலைவர் இராகுல்காந்தி சமூகநீதியை முன்னெ டுத்திருப்பது அசாதாரணமானது – போற்றி வரவேற்கத்தக்கதாகும்.
இந்த நாட்டின் பெரும்பான்மையினர் யார் என்றால், தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மை யினரும் தான் – இவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் கிடைக்கப் பெற வேண்டியதுதான் உண்மையான ஜனநாயகமாகும்.
ஆனால் நடப்பது என்ன? நீட் தேர்வு என்ற பெயரால், காலம் காலமாகக் கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களை மருத்துவக் கல்லூரிகளின் உள்ளே நுழைய விடாமல் தடுப்பதும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் என்ற பெயரில் ஏற்கெனவே சமூக நிலையிலும், கல்வியிலும் ஆதிக்கக் குடையை விரித்துப் பயணிக்கும் உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு (EWS) இடஒதுக்கீடு என்ற சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றியதும் எதைக் காட்டுகின்றன?
ஆண்டு ஒன்றுக்குப் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினர் ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டினால் அவர்கள் ஏழைகள்; அதே எட்டு லட்சம் ரூபாயைப் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆண்டு ஒன்றுக்கு எட்டினால் அவர்கள் முன்னேறியவர்கள் என்பதுதான் ஆர்.எஸ்.எஸின் சமூகநீதி! இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கூடாது என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் வரை தீர்ப்பு வழங்கி இருந்தும், இப்போதைய ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் பொருளாதார அளவுகோல் என்ற ஒட்டகத்தை சமூகநீதிக் கூடாரத்தில் நுழைத்து விட்டது.
இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால்தான் பெரியாருக்கும் – ஆர்.எஸ்.எசுக்கும் இடையே நடக்கும் தத்துவப் போராட்டமே நடக்க விருக்கும் மக்களவைத் தேர்தல் என்று காங்கிரஸ் இளந்தலைவர் அறுதியிட்டு உறுதியாகக் கூறியிருப்பதன் ஆழமான பொருளைப் புரிந்து கொள்ளலாம்.
எனவே சமூகநீதியை வென்றெடுக்க – சமூகநீதிக்கு எதிரான பிஜேபி ஆட்சியை நடக்க இருக்கும் தேர்தலில் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஒருங் கிணைந்து வீழ்த்துவதே உண்மையான சமூகநீதியாகும்.