பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணிப்பூர் நிலைமைதான் இந்தியாவிற்கே ஏற்படும் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் எச்சரிக்கை!

viduthalai
1 Min Read

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணிப்பூர் நிலைமைதான் இந்தியாவிற்கே ஏற்படும் என பரகல பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்.19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங் களாக நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திப்பதால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கிய தேர்தலாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரம் கடுமையாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாகப் பொது மக்களின் வாங்கும் சத்தி குறைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக பா.ஜ.க அரசின் பொருளா தார திட்டங்களைப் பொருளாதார நிபுணர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் குரலை ஒன்றிய அரசு காது கொடுத்துக் கேட்பதே இல்லை.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் கூட பா.ஜ.கவின் பொருளாதார கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணிப்பூர் நிலைமைதான் இந்தியாவிற்கே ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்துள்ள பரகல பிரபாகர், ” பா.ஜ.கவும் பிரதமர் மோடி யும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை முழுமையாக மாற்றிவிடுவார்கள். இந்தியாவின் வரைபடத்தையே இவர்கள் மாற்றி விடுவார்கள்.

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலைதான் நாடுமுழுவதும் ஏற்படும். மேலும் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தலே நடைபெறாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *