‘பிஞ்சு போன செருப்பு’ என்று ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசி பிரச்சாரம் செய்த தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.
சிறீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ. கூட்டணியின் தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தமிழ்நாடு பா.ஜ. தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் ஹிந்தி எதிர்ப் புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தப் பிரச்சாரத்தின் போது, அண்ணாமலை பேசுகையில், ‘‘மக்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருவர் சம்பந்தமே இல்லாமல் 1980 இல் பேசிய அதையே இப்போதும் பேசுகிறார். ஹிந்தி, சமஸ்கிருதம் இது அது என்கிறார். இன்னும் இந்த பிஞ்சு போன சப்பலை அவர்கள் தூக்கி எறியவில்லை’’ என்றார்.
‘‘ஒட்டுமொத்த தமிழ்நாடும் நடத்திய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?” என அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலை தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஹிந்தி எதிர்ப்பில் தலைமை தாங்கிக் களம் கண்டவர் தந்தை பெரியார் கொளுத்தும் கோடையில் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், அறிஞர் அண்ணா போன்ற பெரு மக்களும் ஹிந்தியை எதிர்த்துப் போர்க் களம் கண்டனர். அத்தகைய மொழி மானம் காக்கும் போராட்டத்தை பிஞ்சு போன செருப்பு என்கிறார் இந்த அண்ணாமலை என்றால் இதன் பொருள் என்ன? அந்தச் சான்றோர் பெரு மக்களை அப்படிச் சொன்னதாகத் தானே பொருள்.
ஆளுநர் ஆர்.என்.ரவி – அண்ணாமலைக் கம்பெனிகள் இப்படியே பேசிக் கொண்டிருக்கட்டும்.
முதலமைச்சர் முன்பு, ‘‘தயவு செய்து ஆளுநர் ரவியை மாற்றிவிடாதீர்கள்” என்று சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
தமிழ்நாடு ஹிந்தி எதிர்ப்பு மண்!
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் ஆட்சிகளையே குப்புறத்தள்ளி இருக்கிறது என்பது நினைவிருக்கட்டும். இதற்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். எதால்?