புதுடில்லி, மார்ச் 28 இந்தியா செய்யும் மிகப் பெரிய தவறு என்ன என்பதை விளக்கிய ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன், வரும் காலத்தில் இந்தியாவுக்கு எது மிகப் பெரிய பிரச் சினையாக இருக்கும் என்பதையும் பட்டிய லிட்டார்.
நமது நாட்டின் ரிசர்வ் வங்கியில் 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவர் ரகுராம் ராஜன். இவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த போது தான் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது இந்தியா முழுக்க பயன்படுத்தும் யுபிஅய் முறை இவரது காலத்தில் உருவாக்கப்பட்டது தான். இதற்கிடையே சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மேனாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், இந்தியாவின் பொருளாதாரம் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மிக வலுவாக இருப்பதாகத் தொடர்ந்து சொல்லப்படும் நிலையில், அதை நம்புவதன் மூலம் இந்த மிகப் பெரிய தவறை செய்து வருவதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ஏனென்றால் நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் அதை உடனடியாக சரி செய்யவில்லை என்றால் பிரச்சினை ஏற்படும் என்றும் ரகுராம் ராஜன் கூறினார்.இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் பேசுகையில், “தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவால் என்றால் அது தொழிலாளர்களின் கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்துவது தான். அதைச் சரி செய்யவில்லை என்றால் 65 கோடி பேர் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து முழுப் பலனைப் பெற இந்தியா போராடும்.
மிகப் பெரிய தவறு என்ன: இப்போது இந்தியா செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு, விளம்பரங்களை நம்புவதுதான். இவர்கள் சொல்வது போல வரும் காலத்தில் வளர்ச்சி ஆஹா ஓஹோ என்று இருக்குமா என்பதை உறுதிப்படுத்த நாம் இன்னும் பல ஆண்டுகள் கடினமாக உழைக்க வேண்டும். இது போன்ற விளம்பரங்களைப் பரப்புரைகளை நம்ப வேண்டும் என்றே அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள். ஆனால் இந்த விளம்பரத்தை நம்பினால் இந்தியா செய்யும் மிகப் பெரிய தவறாக இருக்கும்” என்றார்.2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த பொருளாதாரமாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்வது குறித்த கேள்விக்கு அவர், “உங்கள் குழந்தைகளில் பலர் உயர்நிலை கல்வியைப் படிப்பது இல்லை என்ற போது.. இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருக்கும் போது நீங்கள் இப்படி பேசுவது நான் அறியாமையாக இருக்கும்..
எது முக்கியம்: நம்மிடம் வேலை செய்யும் வயதில் அதிகப்படியான இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நல்ல வேலைகளில் பணியாற்றினால் மட்டுமே நமக்கு முழு பலன் கிடைக்கும். இந்த விவகாரத்தில் இந்தியா இப்போது பேரழிவை எதிர்நோக்கி இருப்பது போலவே தோன்றுகிறது. இந்தியாவில் உள்ள இளைஞர்களை நல்ல வேலைக்கு தயார்ப்படுத்த வேண்டும். அடுத்து அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.கரோனா பெருந்தொற்றால் நாட்டில் கல்வி கற்கும் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தைகளின் கற்றல் திறன் இப்போது 2012-க்கு முந்தைய நிலைக்குச் சென்றுவிட்டது. மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 20.5% பேரால் மட்டுமே இரண்டாம் வகுப்பு பாடங்களைப் படிக்க முடிகிறது. இந்தியாவில் எழுத்தறிவு விகிதங்கள் வியட்நாம் போன்ற பிற ஆசிய நாடுகளை விடக் குறைவாகவே உள்ளன. இவை நம்மை கவலையடையச் செய்ய வேண்டும்
கல்விக்கு அதிக நிதி தேவை: உயர்கல்விக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடைவிட, சிப் உற்பத்திக்கான மானியங்களுக்கு மோடி அரசு அதிக நிதி ஒதுக்குவது என்னைப் பொறுத்தவரைத் தவறானது. அரசு நமது நாட்டை ஒரு சிறந்த தேசமாக மாற்ற வேண்டும் என நினைக்கிறது. ஆனால், இதற்காக அவர்கள் அதில் கவனம் செலுத்துகிறார்களா என்பதே வேறு கேள்வியாக இருக்கிறது. சிப் உற்பத்தி போன்ற கவுரவ திட்டங்களில் தான் நாம் இனி கவனம் செலுத்தப் போகிறோமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.