ஆளுநர் மறுப்பு: அரசமைப்புச் சட்ட அறியாமையா? உச்சநீதிமன்றத் தீர்ப்பின் புரியாமையா? பொன்முடி மீதான குற்றத் தீர்ப்பு தண்டனைக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

சட்டமன்ற உறுப்பினராக அவர் நீடிக்கக் கூடிய நிலையில் – அமைச்சராக பொறுப்பளிப்பது முதலமைச்சருக்குரிய அரசமைப்புச் சட்டப்படிக்கான சரியான தனி உரிமையே!
முதலமைச்சரின் முடிவு சரியானது – வரவேற்கத்தக்கதே!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த நிலையில், பொன்முடி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார்; சட்டமன்ற உறுப்பினரான நிலையில், அவருக்கு அமைச்சர் பொறுப்பு அளிப்பது முதலமைச்சருக்குரிய அரசமைப்புச் சட்டப்படியான சரியான தனி உரிமையே! முதலமைச்சரின் முடிவு சரியானது, வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தி.மு.க. அமைச்சரவையில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்து வந்த முனைவர் க.பொன்முடி அவர்கள்மீதும், அவரது வாழ்விணையர் திருமதி விசாலாட்சி அவர்கள்மீதும் ஏற்கெனவே ஆண்ட அ.தி.மு.க. அரசு காலத்தில் போடப்பட்ட அளவுக்கு மீறிய சொத்து சேர்த்ததாகக் கூறப்பட்ட வழக்கு விசா ரணைக்கு வந்து, அதை விசாரித்த கீழமை நீதிமன்றம் அவ்விருவர்மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாற்றுகள் சட்டப்படி சரியான நிருபணம் ஆகவில்லை என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து, அவ்விருவர்களையும் விடுதலை செய்தது.

சென்னை உயர்நீதிமன்ற
நீதிபதியின் தீர்ப்பு
பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அவர்கள், தானே வலியச் சென்று இந்த வழக்கின் விடுதலையையும், இதுபோன்ற அமைச்சர்களாக உள்ளவர்கள் வழக்குகளையும் எடுத்து, அவசரமாக விசாரித்து, மீண்டும் அவ்விசாரணை யில், இவர்களுக்கு மூன்றாண்டு தண்டனை தந்து தீர்ப்புக் கூறினார்.
இப்படி பதவிகளில் உள்ளவர்கள் இரண்டாண்டு (மூன்றாண்டு) தண்டனை – அதற்கு மேல் பெற்றால், அவர்கள் வகிக்கும் பதவியும் சட்டப்படி பறிக்கப்படும் என்ற சட்ட விதிக்கேற்ப, அவரது எம்.எல்.ஏ., பதவி, அதன்மூலம் அவர் மாண்பமை முதலமைச்சரால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட அமைச்சர் பதவியும் அவரிடமிருந்து விலக்கப்பட்ட நிலை சட்டப்படி ஏற்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடும் – உச்சநீதிமன்றத்தின்
இடைக்கால ஆணையும்!
பாதிக்கப்பட்ட அவரும், அவரது துணைவியாரும் இந்தத் தண்டனையை நிறுத்தி வைக்கும்படியும், இது தங்களால் ஏற்கக்கூடிய தீர்ப்பு அல்ல – பிணை வேண்டி – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், முதல் கட்டமாக அவரது தண்டனை நிறுத்தம் தரப்பட்ட தோடு, கடந்த 11-3-2024 மேல்முறையீட்டு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகளின் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதற் கான வாதங்களையும் கேட்டு, அதன் பிறகு, இந்தப் பிணை (ஜாமீன்)பற்றியும், தண்டனை நிறுத்தி வைப்புப் பற்றியும் தங்களது ஆணைகளையும் (இடைக்கால) தீர்ப்பாகவும், இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதியின், இதன் முழு சட்ட விளக்கத்தை இந்த உச்சநீதிமன்றம் ஏற்காததோடு, அவர் தந்த தீர்ப்புப்பற்றி, Therefore, in the facts of the case and in view of the law laid down by this Court in the case of Afjal Ansari v. State of Uttar Pradesh 1, a case is made out for grant of suspension of sentence and conviction. The reason is that in view of operation of Section 8(3) of the 1951 Act, irreversible situation will be created if the conviction is not suspended.
Accordingly, we direct that the conviction of the appellant (K.Ponmudi @ Deivasigamani) under the impugned judgment and order stands suspended. Therefore, it follows that even the sentence stands suspended.

தீர்ப்பினைப் பின்பற்றத் தவறி, முறையான தீர்ப் பளிக்கவில்லை என்பதால், அந்தத் தண்டனையையும் நிறுத்தி வைப்பதுடன்,
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படுவதற்கு, தண்டனை தருவதற்கு முன்னுள்ள நிலைதான் திரும்பவும், Status Quo ante என்பதே சட்டப்படி உள்ள நிலை. அதாவது குற்றத் தீர்ப்போ தண்டனையோ இல்லாத நிலைதான் – இன்றைய அவரது நிலை.
எனவே, அவர் மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியுள்ள நிலையில்,
1. சட்டமன்ற உறுப்பினரான பிறகு, அவரை அமைச் சராக முதலமைச்சர் பரிந்துரை எப்படி மறுப்புக்கு உரியது?
2. முதலமைச்சர் பரிந்துரையை மறுக்க ஆளுநருக்கு – அதுவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு – ஆணை – நிவாரணத்திற்குப் பிறகு மறுக்க ஏது உரிமை? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் Article 164(1) -இன்படி உரிமை இல்லை.

மீண்டும் அமைச்சராக நியமனம் செய்வது முதலமைச்சருக்குரிய சிறப்பு உரிமையாகும்!
சரியான முடிவை சரியானபடி நமது முதலமைச்சர் காலதாமதமின்றி முடிவு செய்து, மீண்டும் அமைச்சராக்க விருப்பது இந்த அரசின், அமைச்சரவையின் மாண் பினைக் காப்பாற்றும் – ஜனநாயகப் பாதுகாப்புக்கான உறுதிமிக்க பாராட்டத்தக்க முடிவு ஆகும் – வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அரசமைப்புச் சட்டப்படி பிரமாணம் எடுத்த பிறகு, பிரிவு 162-இன்படி செயல்படாமல் ஓர் அடாவடித்தனம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர்போல சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியே அனுப்பப்பட்ட கோப்புகளுக்கு சரியானபடி தீர்வு காண மறுத்து, தொடர்ந்து ஆளுநர் நடந்து வருவதற்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தனது ‘அதிருப்தியை’ (பேரறிவாளன் வழக்குமுதல்) தெரி வித்தும், சட்ட ஞானத்தோடு நடந்துகொள்ளாமல், இதிலும் ஒரு தவறான நிலைப்பாட்டை எடுத்து, தனது வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு விரோதமான – அவமதிப்பு குற்றமாகும்.
Question of facts, Question of law இரண்டு கோணங்களையும் அந்தத் தீர்ப்பு குற்றத் தீர்ப்பு – தண்டனை நிறுத்தி வைப்பு என்கின்ற நிலைதான்.
முதலமைச்சருக்கு எந்த ஒரு எம்.எல்.ஏ.வையும் அமைச்சராக்கும் அதிகாரம் அவரது தனிப்பட்ட சிறப்பு உரிமை (Prerogative). அதனை மறுக்க ஆளுநருக்கு உரிமை இல்லை என்பதை முன்பே செந்தில்பாலாஜி நியமன வழக்கிலேயே இவர் பட்டும் புரிந்துகொள்ளாதது அரசமைப்புச் சட்டத்தை அலட்சியப்படுத்தும் மூர்க்கத் தனமாகும். அரசமைப்புச் சட்டமும், ஜனநாயகமும் காப்பாற்றபடவேண்டும்.

தனிப்பட்ட ஒரு பொன்முடி என்ற நபருக்காகவோ – அமைச்சருக்காகவோ நாம் இதனை எழுதவில்லை; மாறாக, கூட்டுப் பொறுப்புள்ளதுதான் அமைச்சரவை Vicarious Responsibility என்பது என்ற தத்துவம் முக்கியம்.
அரசியலில் இப்படி ஒரு நிலை உருவாகி, அதன்மூலம் முதலமைச்சருக்கு, ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு களங்கம் உருவாக்கப்பட்டு, கறையை ஏற்படுத்தி, அதை ஒரு பிரச்சார மூலதனமாக, அதன் அரசியல் எதிரிகள் பயன்படுத்த முடியாத, தடுப்பு முறையும் ஆகும் – இந்த மறு நியமனம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
19-3-2024

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *