அன்னையே! உங்கள் வழியில்

viduthalai
1 Min Read

இடியாய் முழங்குகிறார்
எரிமலையாய்ப் பொங்குகிறார்…
தமிழர்களின் விடிவுக்கு
தேவை இவர் என உணர்ந்து
தன் வாழ்வைப் பலிகொடுத்து
தந்தை பெரியாரின் வாழ்க்கையை
நீட்டித்தந்த எங்கள் அன்னையே!

நேற்று வரை உடன் இருந்தோர்
அவதூறுகளை அள்ளிவீசியபோதும்
அமைதிக் கடலாய்
இடதுகையால் தள்ளிவிட்டுக்
கடந்து செல்வதுபோல்
அவர்… இவர்… என எல்லோரையும்
கடந்து சென்ற எங்கள் தாயே!

அய்யாவின் சொத்துகளை
இவர் பாதுகாப்பாரா? என
அய்யமுற்ற அனைவருமே
மூக்கில் விரலை வைத்து
வியக்கும் வண்ணம்
அய்யாவின் அறக்கட்டளைச்
சொத்துக்களை பன்மடங்காக்கி
தனக்குக் கிடைத்த பரம்பரைச்
சொத்துகளையும்
அறக்கட்டளையாக்கி
பொதுமக்களுக்கு பயன்பெறும்
வண்ணம் தந்து சென்ற
எங்கள் தாயே!
அன்னை மணியம்மையாரே!

அறிவிலிகள் சிலர்..
யாரால் பலன்பெற்றோம்
என அறியாத…
படித்த
தற்குறிகள் சிலர்…
அவதூறாய் தங்களை
ஊடகங்களில் பதியும்போது
உள்ளமெலாம் கொதிக்குதம்மா!
உலையில் போட்ட அரிசிபோல
வெந்து நொந்து மனம் வேகுதம்மா..

ஆனாலும்
அவதூறுகளைப் புறந்தள்ளி
அய்யாவின் கொள்கைகளைப்
பரப்பும் வழியைத்
தந்து சென்ற எங்கள் அன்னையே!
தாங்கள் காட்டிய வழியில்
அய்யாவின் கொள்கை பரப்பும்
அய்யா ஆசிரியர் அடிச்சுவட்டில்
நாங்கள் தொடர்கிறோம்..
தந்தை பெரியாரின் பணிமுடிப்போம்.
எதையும் எதிர்பாரா.
அன்னையே ! உங்கள் வழியில்..

முனைவர் வா.நேரு தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *