அம்மா குறித்து ‘நெஞ்சுக்கு நீதி’யில் கலைஞர்

viduthalai
1 Min Read

தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தை, பொருளாளர் பேராசிரியர் முன்னின்று கூட்டி விட்டார். பொறுப்புகளிலிருந்து விலகிய நானும், நாவலரும் அந்த செயற்குழுக் கூட்டத்தில் முதலில் கலந்து கொள்ளவில்லை. என்னையும் நாவலரையும் கலந்து பேசச் செய்திடும் முயற்சிகள் திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களாலும், தளபதி வீரமணி அவர்களாலும் எடுக்கப்பட்டு பெரியார் திடலில் நாங்கள் இருவரும் கலந்து பேசினோம்.

இளமைக் காலந்தொட்டு இலட்சியப் பிணைப்பால் ஆழமாக வேரூன்றி இருந்த நட்பு எங்கள் இருவரையும் கண்ணீர் வடிக்கச் செய்தது. பேராசிரியர் அவர்கள் மற்றும் தி.மு.க. மூத்த தலைவர்களான மன்னை நாராயணசாமி, அன்பில் தர்மலிங்கம், சி.வி.எம்.அண்ணாமலை ஆகியோர் அன்று மேற்கொண்ட மிகச் சிரமமான பணி வெற்றி அளித்து, நானும் நாவலரும் செயற்குழுக் கூட்டத்திற்குச் சென்றோம். எங்களின் பதவி விலகல்களை திரும்பப் பெற வேண்டுமெனச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. செயற்குழு முடிவை அறியவும், எங்கள் அறிவிப்பைக் கேட்கவும். சென்னை அரசினர் தோட்டம் சட்டமன்ற தி.மு.க. அலுவலகத்திற்கு முன்னால் பல்லாயிரம் பேர் திரண்டு இருந்தனர். அந்தக் கூட்டத்தின் மத்தியில் ஒரு மேசையைத் தூக்கிப் போட்டு அதில் ஏறி நின்று நானும், நாவலரும் பேசினோம்.

(‘நெஞ்சுக்கு நீதி’ கலைஞர் மு.கருணாநிதி மூன்றாம் பாகம் – பக்கம் 91 )

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *