வெற்றிக் காற்றுக்கு வேறு திசை ஏது? கவிஞர் கலி.பூங்குன்றன்

viduthalai
1 Min Read

தளபதி
மு.க.ஸ்டாலின்
மானமிகு கலைஞரின்
மகன் என்ப தாலா?

விஞ்ஞான அறிவின்றிக்
கண்ணவிந்தவன்
வெட்டிப் பேச்சு அது
ஆற்றல் உள்ளதே
நிலைத்து நிற்கும்
எனும்
பரிணாமக் கொள்கை
அறியாதார் தம்
பைத்தியக்கார
குரலின் கீறல் அது!

“தூக்கி விடும் பூனை
எலி பிடிக்காது”
எனும் இயற்கையின் மொழி
அறியாதான்
அரை குறைப்
பேச்சின் பிரசவம் அது

அவர்
உழைக்க வில்லை
என்று சொல்
ஒப்புக் கொள்கிறேன்

உன்னால் அது முடியாது!
காரணம்
உன் மனச் சான்றின்
உதடுகள்
அப்படிக் கூற
ஒத்துழைக்காது –
துணிச்சல் போதாது
என்று சொல்
பார்க்கலாம்
அப்படிச் சொல்லும்
துணிச்சல்
உனக்கு வராது!

மிசா கொட்டடியில்
துவைத்து எடுத்தபோது
காயத்தைக்
காயப் போட்டு
கம்பீரமாக
வெளிவந்த
கழக வீரன்!

சுய நலக்காரன்
என்று
சுருக்குப் பைக்குள்
சுருக்கிட முடியாது
மரணத்துக்குப் பின்னும்
மனைவியோடு
உடற்கொடைக்கு
உயிலெழுதிக் கொடுத்த
உள்ளத்துக்குச்
சொந்தக் காரன்!

எல்லாவற்றிற்கும்
மேலாக
திராவிட இயக்கப்
பட்டறையில்
பட்டை தீட்டப்பட்ட
வைரக்கல்!

கட்சிக்குள்
சுருங்கி விடாமல்
கடல்போல் விரிந்த
உள்ளத்தால்
மக்கள் நெஞ்சில்
மலர்ந்து
மணம் வீசும் மகிழம்பூ

சித்தாந்த பலம்
சிங்கப் பெரியார்!
சிரித்து எதிர்கொள்ளும்
சீலம் ‘அண்ணா’
சாதுரிய சதுரங்க
ஆட்டத்தில் கலைஞர்
பாலுண்ட தோ
திராவிட இயக்கப் பாசறை!
வெற்றிக் காற்றுக்கு
வேறு திசை ஏது?

அடுத்து கால்
நூற்றாண்டுக்கு
அவர் வைத்ததுதான்
சட்டம் அரசியலில்!
முறையான வளர்ச்சி
முத்தம் கொடுத்து
முதலிடத்தில்
தூக்கி நிறுத்தும்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *