மேகதாது அணை கட்ட கருநாடக மாநில அரசு குழுக்கள் அமைப்பு! மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்

viduthalai
2 Min Read

சென்னை,பிப்.17- மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் மாநிலங்க ளவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
கருநாடக சட்டமேலவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் பெலகாவியில் கடந்த 2023, டிசம்பர் 14 அன்று நடைபெற்றது. மேகதாது திட்டம் குறித்து எழுப் பப்பட்ட கேள்விக்கு, நீர்ப்பாசனத் துறை அமைச்சரும், துணை முதல மைச்சருமான டி.கே.சிவக்குமார் பதிலளித்து பேசினார். அதில் அவர், “ ‘நமது நீர், நமது உரிமை’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாம் போராடுவோம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் நம்மை விட தமிழ்நாட்டிற்குத் தான் அதிக நன்மை கிடைக்கும்.
நமக்கு 400 மெகாவாட் மின் சார உற்பத்தி செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், தமிழ் நாட்டிற்கு கூடுதல் நீர் கிடைக்கும். மேகதாது திட்டத்தைச் செயல் படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இந்தத் திட்டத்தை நமது மண்ணில் செயல்படுத்தினா லும், ஒன்றிய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். மாண்டியா, மைசூரு, பெங்களூரு உட்பட பல நகரங் களுக்கு குடிநீர் விநியோகிக்கும், மின்சாரம் உற்பத்தி செய்யும் மேகதாது திட்டத்தை செயல் படுத்த அரசு தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, 16.2.2024 அன்று கருநாடக சட்டப் பேரவையில் முதலமைச்சர் சித்த ராமையா மாநில அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசும் போது, “காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மேகதாது அணையைக் கட்ட ஒரு தனி மண்டலக் குழு, இரண்டு துணை மண்டலக் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது” என்று தெரிவித்து இருக்கிறார்.
கருநாடக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானதாகும்.
காவிரியில் நீரைத் தடுத்து, 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 67.14 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட மேகதாது அணையைக் கட்டவும், 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையத்தை அமைக் கவும் கருநாடகம் திட்டமிட்டு உள்ளது. இதை அனுமதித்தால் தமிழ்நாட்டின் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும்.
கடந்த 48 ஆண்டுகளில் 15.87 லட்சம் ஹெட்டேர் நிலம் சாகுபடி பரப்பை நாம் இழந்துள்ளோம். ஆனால் கருநாடகத்தின் பாசனப் பரப்பு 9.96 இலட்சம் எக்டே ரிலிருந்து 38.25 இலட்சம் எக் டேராக அதிகரித்துவிட்டது.

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரி மையைப் பறித்து வரும் கருநாடகா, மீண்டும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று முனைந் திருப்பதும், திட்டத்தைச் செயற் படுத்த குழுக்கள் அமைத்துள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா குறிப்பிட்டு இருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
கருநாடகம், நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத் தீர்ப் பையும் மீறுவதை அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கி றேன். -இவ்வாறு வைகோ குறிப் பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *