ஒன்றிய அரசின் முடிவுக்கு மரண அடி! தேர்தல் பத்திரம்மூலம் நன்கொடை செல்லாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

viduthalai
3 Min Read

புதுடில்லி, பிப்.15 அரசியல் கட்சிகளுக்கு நிதிகளை திரைமறைவில் வாரி வழங்க வகை செய்யும் தேர்தல் பத்திரங்கள் செல்லாது; அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித் துள்ளது. இத்தீர்ப்பு ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசுக்கு மிகப் பெரும் பின்னடைவாகும். மேலும் தேர்தல் பத்திரங்கள், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது; தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கும் எதி ரானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்றுக் குவித்தன.
கடந்த 2017-2018 ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரையிலான தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசி யல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒரு நபர், நிறுவனம் எத்தனைப் பத்திரங்களை வேண்டு மானாலும் வாங்கலாம். இந்த பத்திரங்களில் வாங்குப வரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. 15 நாள்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் வைப்புச் செய்யப்படும்.

இந்த சட்டத் திருத்தத்துக்குப் பின்னர் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள்மூலம் பெருமளவு நன் கொடைகளைப் பெற்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையைப் பெற்றுக் குவித் தன. குறிப்பாக பா.ஜ.க. அதிக அளவிலான நன் கொடையை பெற்றுள்ளது.
ஆனால், தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. தேர்தல் பத்திரம் திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. தேர்தல் பத்திரம் செல்லாது என அறிவிக்கவேண்டும் என மனுதாரர்கள் தெரிவித்தனர்.
தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்த திட்டத்தில் எந்தவொரு சட்ட விதிகளும் மீறப்படவில்லை, யாரு டைய உரிமையும் மீறப்படவில்லை என ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிந்து கடந்த நவம்பர் 2 ஆம் தேதி நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
ஒன்றிய அரசு தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத் தில், தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருகிறவர்கள் யார் என்கிற விவரத்தை அறியக் கூடிய உரிமை பொது மக்களுக்கு கிடையாது என தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தது.

ஒருமித்த கருத்து!

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு – 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பு அளித்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலை மையிலான அமர்வு அளித்த தீர்ப்பு வருமாறு:
– தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
– தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் செல்லாது – தேர் தல் பத்திரங்கள் வாக்காளர்களது உரிமையை பறிக்கிறது.
தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது
தேர்தல் பத்திரங்கள் திட்டம் மட்டுமே கருப்புப் பணத்தை ஒழிக்க உதவாது என்று கூறிய நீதிபதிகள், அரசைக் கேள்வி கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறி உள்ளன. தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் – சட்டத்தை மீறும் வகையில் உள்ளன.
அதாவது, தகவல் அறியும் உரிமை சட்டம், அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை வழங்காமல் இருப்பதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை.
தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது; தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *