‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்” – ‘‘தொகுதி சீரமைப்பு” என்ற பெயரில் ஜனநாயகத்துக்கும், மாநில உரிமைக்கும் எதிராக செயல்படும்
ஒன்றிய பி.ஜே.பி. அரசின் நோக்கத்தை முறியடிப்போம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (14-2-2024) ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரு முக்கிய தீர்மானங்களை வரவேற்றும், ஜனநாயகம், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் அரிய முயற்சி என்று பாராட்டியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
நேற்று (14-2-2024) தமிழ்நாடு சட்டமன்றத்தில் நமது முதலமைச்சர் ‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்” மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் இரண்டு முக்கியமான தனித்தீர்மானங்கள் முன்மொழி யப்பட்டு, அவையில் வழிமொழிந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம்!
‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக, அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக ஒன்றியத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. – மோடி அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதை ஏற்கவியலாது என்பதை நாடு முழுவதும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாடு இதில் ஒருமித்த குரலோடு (பா.ஜ.க. தவிர) இருக்கிறது என்பதை நேற்று (14-2-2024) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது!
இந்த சிந்தனை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பல ஜனநாயக அமைப்புகளுக்கும் தேர்தல் கள்மூலம் நடைமுறைப்படுத்த வேண்டிய பல்வேறு சட்டப் பிரிவுகளுக்கும் அதனை உருவாக்கிய அரசமைப் புச் சட்ட கர்த்தாக்களின் (Founding Father of the Constitution) கருத்துகளுக்கு முற்றிலும் மாறானது.
1. நாடாளுமன்றத் தேர்தல்
2. மாநில சட்டமன்றங்களுக்குரிய தேர்தல்
3. உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்
என்றுள்ள அமைப்பில், ‘ஒரே சீர்மையைப் புகுத்து கிறோம்’ என்ற சாக்கில், இது தனி ஒற்றை ஆட்சிக்கான அஸ்திவாரம் போடுவது ஆகும்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரின் கருத்தை நிறைவேற்றத் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ். கொள்கை கொண்ட ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சி!
நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் – கட்சித் தாவல்கள்மூலம் ஜனநாயக ஆட்சி பலம் குன்றினால், உடனடியாக மறுதேர்தல்களை நடத்த முடியாத நிலை – இப்படி பல சட்டச் சிக்கல்கள், நடைமுறைக்கு ஒவ்வாதவை போன்ற பல உண்டு.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் கருத்துக்கு செயல் வடிவம் தருவதே இதன் உள்நோக்கம்!
இதனை நன்கு புரிந்த உண்மையான ஜனநாயகப் பாதுகாவலர்கள் – இந்தியா முழுவதிலும் உள்ளவர்கள் இதனை எதிர்க்கிறார்கள்.
அதனை தமிழ்நாடே எதிர்க்கிறது என்ற பிரகடனம் தான் நமது முதலமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றிய அந்தத் தீர்மானம்!
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் மாநிலங்களுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதா?
இரண்டாவதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – திட்டமிட்டே தென்மாநிலங்களின் நாடாளுமன்ற மக் களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை – குறிப்பாக தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களின் எண்ணிக்கை – மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற ஒரு சூழ்ச்சிப் பொறியை தயாரிக்கின்றது ஒன்றியத்தில் உள்ள பா.ஜ.க. மோடி அரசு!
இந்திய அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்று மக்கள் தொகைக் கட்டுப்பாடு (Population Control) அது குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தின்மூலம் சாத்தியம் என்ற ஒன்றிய அரசு, மாநில அரசுகள் தங்களது சுகா தாரத் துறை, மருத்துவத் துறை மூலம் வெற்றிகரமாக செய்து, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றால், அதற்குத் தண்டனை தருவதுபோல, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற போர்வையில், தமிழ்நாடு போன்ற முற்போக்கு சிந்தனையுடன் சிறப்பாக ஆட்சி நடத்தும் மாநிலங்களுக்குப் பரிசளித்துப் பாராட்டு வதற்குப் பதிலாக, இப்படி தொகுதிகளைக் குறைத்து, பி.ஜே.பி.,க்கு, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தேர்தல் வெற்றி வாய்ப்பில்லாத மாநிலங்களுக்குரிய குரலை ஒடுக்கும் மக்கள் விரோத ஜனநாயக ஒடுக்குமுறை என்பதால், இதனையும் எதிர்த்த தீர்மானமாக நமது முதலமைச்சர் முன்மொழிந்து அவை வரவேற்று வழமொழிந்து ஏற்றுள்ளது!
இவை இரண்டும் இந்திய ஜனநாயகக் காப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சாதனை களாகும்!
இதனை நாம் வரவேற்று, பாராட்டி முதலமைச்சருக்கு நன்றியும் கூறுகிறோம்.
அதுபோலவே, முக்கிய எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த இரு தீர்மானங்களையும் வரவேற்று, ஆதரவாக வாக்களித்தது வரவேற்கத்தக்கது!
எதிர்க்கட்சியே தவிர – எதிரிக்கட்சியல்ல!
உண்மையான எதிர்க்கட்சியின் தத்துவம் ஆக்கப் பூர்வமான கொள்கைத் தீர்மானங்களை ஆளுங்கட்சி கொண்டு வருகிறபொழுது, அது மக்கள்நலம் – தமிழ் நாட்டின் உரிமை என்று வருகிறபோதும் கண்களை மூடிக்கொண்டு எதிர்ப்பதல்ல – ஆதரிப்பதுதான் – நியாயமானது.
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி என்பது எதிரிக்கட்சி அல்ல என்பதை இப்படி நிலைநாட்டிக் காட்டவேண்டும்.
சிறு பிரச்சினைகளை மட்டுமல்ல –
பெரும் பிரச்சினைகளையும்
தீர்த்து வைக்கும் தி.மு.க. அரசு!
நேற்று (14-2-2024) சட்டமன்றத்தில் சிறு சிறு பிரச்சினைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தீர்த்து வைக்கவேண்டுமென்று கோரிக்கை வைத்த போது, முதலமைச்சர் குறுக்கிட்டு, ‘‘சிறுசிறு பிரச்சினைகள் என்ன, பெரும் பெரும் பிரச்சினைகளானாலும் தீர்த்து வைக்கும் இந்த அரசு” என்று கூறியது அனைவரது பாராட்டுதலையும் பெற்றதாக அமைந்தது.
அதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வற்புறுத்தி வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி மாற்றம்பற்றியதையும் சட்டமன்றத் தலைவர் பரிசீலனைக்கு எடுத்து, தீர்வு காணவேண்டும் என்று முதலமைச்சர் கூறினார்.
நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் உடனடியாக சட்டமன்றத் தலைவரால் பரிசீலிக்கப்பட்டு, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக திரு.உதயகுமார் அவர்கள் ஏற்கப் பட்டு, அவருக்குரிய இருக்கை மாற்றமும் ஏற்பட்டது!
இவை எல்லாம் தி.மு.க. கட்சியின் ஜனநாயகத்திற்கே உரிய சீரிய பண்பார்ந்த நடவடிக்கைகளாகும்!
இந்த நடவடிக்கைகளைக் கண்டு பார்ப்பன நாளேடு ஒன்றுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
சிண்டுமுடியும் வேலை நடக்காது –
நடக்கவே நடக்காது!
‘‘முதல்வரும் – எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாகி விட்டார்கள்” என்ற ஒரு புதிய பிரச்சாரத்தைப் படம் போட்டு கிளப்பி விட்டிருக்கிறது!
‘அ.தி.மு.க.’ என்ற சொல்லில் ‘தி.மு.க.’ உள்ளடக்கம் என்பதை தமிழ்நாட்டை ஆரியம் – காவி வண்ணம் ஆக்கத் துடித்து ‘கஜகர்ணம்’ போடும் காவிகள் ஏனோ மறந்தனர்!
தி.மு.க. – அ.தி.மு.க. இரண்டும் பங்காளி கட்சிகள்தான் – பா.ஜ.க. அப்படி அல்ல; கொள்கைப் பகையாளி கட்சியாகும்.
இதனைப் புரியாது பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டிலிருந்து எவர் பல்லக்குத் தூக்கினாலும், அவர்களைத் தமிழினம் ஒருபோதும் சகிக்காது, மன்னிக்காது!
‘‘சிண்டு முடிந்திடுவாய் போற்றி!” என்ற அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை இன்றும் எப்படியெல்லாம் படமெடுத்தாடுகிறது பார்த்தீர்களா?
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15-2-2024