புதுடில்லி, பிப். 14- தி.மு.க. மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா மாநிலங்களவையில் உரையாற்றுகையில், ‘ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்’ எனக் கூறி ஆட்சிக்கு வந்தீர்கள்-வேலை வாய்ப்புகளை உரு வாக்கவும் இல்லை – வேலை கொடுக்கவும் இல்லை எனக் குறிப்பிட்டு ஒன்றிய பாஜக அரசை சரமாரியாக சாடினார்.
ஒன்றிய பா.ஜ.க. அரசுமீது
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
பி.ஜே.பி. அரசு ஆட்சி முடிகின்ற காலகட்டத்தில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒருநாள் நீட்டித்து, தன்னுடைய தேர்தல் பிரச் சாரத்திற்கு இந்த அவையையும் பயன்படுத்திக் கொள்கிறது. உங்களுடைய அரசின் 10 ஆண்டு சாதனைகள் என்றும், முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டு பின்னடைவு என்றும் நீங்கள் சமர்ப்பித்துள்ள வெள்ளை அறிக்கை மீதான இந்த முக்கியமான விவாதத்தில் பங்கேற்பதில் ஆர்வம் கொள்கிறேன். ஆனால் இந்த விவா தத்தில் நாங்கள் பேச போதுமான நேரம் வழங்கப்படவில்லை. விவாதத்தில் பேச நேரத்தை ஒதுக்குவது, நீங்கள் பேசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது, கூட்டத் தொடரை ஒருநாள் நீட்டிப்பது என அனைத்திலும் உங்கள் அரசு தன்னிச்சை யாகவே நடந்து கொள்கிறது. ஆனால் 2024 தேர்தலுக்குப் பின்னர் அய்.என்.டி.அய்.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும், அப்போது இந்த அரசின் செயல்பாடுகள் பற்றி வெள்ளை அறிக்கை சமர்ப்பிப்போம், அப்போது உங்களுக்கு அந்த அறிக்கை பற்றி பேசுவதற்கு போதுமான அளவு நேரம் வழங்கப்படும்.
எதிர்க்கட்சியின் குரலை நெரிக்க மாட்டோம். எதிர்க் கட்சியினரின் குரலை நெரிக்கக்கூடாது. நாடாளுமன்ற தொலைக் காட்சி எங்களைகாட்டுவதில்லை, நாங்கள் பேசுவதற்கு ஒலி வாங்கி கொடுப்பதில்லை, அப்படி என்றால் நாங்கள் எங்கு பேசுவது? எப்படி பேசுவது? நாங்கள் எதற்காக இங்கு வருகிறோம்? மாநிலங்களின் பிரதிநிதி யாக, மக்களின் பிரதிநிதியாக இங்கு வந்திருக்கிறோம். குறைந்தபட்சம் எங்களுடைய உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்து வதற்கு போதுமான நேரம் ஒதுக்குங்கள். ஆளும் கட்சியி னரையும் எதிர்க்கட்சியினரையும் வேறுபாடின்றி நாடாளு மன்றத்தில் சமமாக நடத்துங்கள். முந்தைய அரசை குற்றம் சாட்டி இந்த அரசு இந்த வெள்ளை அறிக்கையை கொண்டு வந்திருக்கிறது. நாம் ஒருவரை ஒற்றை விரலை நீட்டி குற்றம் சொல்லும் பொழுது மூன்று விரல்கள் நம்மை நோக்கி இருக்கிறது என்பதை இங்கு உள்ள அனைவரும் அறிவார்கள் நிதியமைச்சரும் அறிவார். முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல்வேறு நிலைகளில் தோல்வி அடைந்து விட்டதாக நீங்கள் சொன்னீர்கள். நான் முதலில் உங்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அறிஞர் அண்ணாவின்
பொறுப்புணர்ச்சி!
எங்களது திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் அண்ணா முதலில் இந்த மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்துவிட்டு பின்னர் தமிழ்நாடு முதலமைச்சரானவர். அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆட்சி செய்து கொண்டிருந்த பொழுது மாணவர்கள் போராட்டம் வெகு தீவிரமடைகிறது. காவல்துறையால் போராட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை முதலமைச்சரி டம் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி கேட்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் அண்ணா அனுமதி தர மறுக்கிறார். ரயில்வே நிலையத்திற்குள் புகுந்து விட்டார்கள் மாணவர்கள், ரயிலை முற்றுகை யிட்டு விட்டார்கள், ரயில் பெட்டிக்கு தீ வைக்கக் கூடும் என்று காவல்துறை சொன்னபோது, ரயில் பெட்டிக்கு தீ வைத்தால் ஒன்றோ இரண்டோ ரயில் பெட்டிகள் எரிந்து சாம்பலாகலாம்; அப்படி சாம்பல் ஆனால் நாம் புதிய ரயில் பெட்டியை உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆனால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தால், உயிரை யார் திருப்பித் தர முடியும்? பெற் றோருக்கு யார் பதிலளிப்பது? என்று அண்ணா பதிலளித்தார். அண்ணாவின் இந்த பதில் ஆட்சியில் இருப்பவர்களின் பொறுப்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.
போராடிய விவசாயிகள்
700 பேர் மாண்டு மடிந்தார்கள்!
அவசர அவசரமாக எதிர்க்கட்சியினரின் குரலையும் காதில் வாங்காமல், முறையற்ற முறையில் இந்த நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் பின்னர் திரும்பப் பெறப்பட்டது. அந்த சட்டங்களை எதிர்த்து வீதிக்கு வந்து போராடிய விவசாயிகள் 700 பேர் மாண்டு மடிந்தார்கள். இது இந்த அரசின் பொறுப்புணர்ச்சியா?
700 விவசாயிகளின் மரணத்திற்கான பொறுப்பு இந்த அரசுக்கே சேரும். இதையும் வெள்ளை அறிக்கையில் சேர்த்திருக்கலாமே!
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 500 ரூபாய் தாளை, 1000 ரூபாய் தாளை மாற்றுவதற்கு வரிசையில் நின்ற வர்கள் வங்கி வாசலிலே நூற்றுக்கணக்கில் செத்தார்களே! இதுவும் இந்த அரசின் சாதனையில்தானே சேரும். முதல் கட்ட கரோனா ஊரடங்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னால் அறிவிக்கப்பட்டதால் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் செத்தார்களே, அதுவும் இந்த அரசின் சாதனைகளில் தானே சேரும்.
நான் இரண்டு கருத்துகளை பதிவு செய்ய விரும்பு கிறேன். முதலாவதாக விவசாயத்துறை. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின் படி, 2020-2022 ஆண்டுகளில் விவசாயத் துறையில் மட்டும் 11,290 பேர் தற்கொலை செய்துள்ளனர். இவர்களில் 5207 பேர் விவசாயிகள். 6083 பேர் விவசாயக் கூலி தொழிலாளர்கள். இவ்வளவு தற்கொலைகள் விவசாயத் துறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 40,000 கோடி லாபம் ஈட்டியுள்ளனர். நிதிநிலை அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைந்து கொண்டே வருகிறது.
விவசாயம் சார்ந்த பொருள்களுக்கு
அதிக வரி விதிப்பு!
விவசாயம் சார்ந்த பொருள்களுக்கு அதிக அளவு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.வேளாண் கருவிகளுக்கு 12 சதவீதம், டிராக்டர் உதிரிபாகங்கள், வேளாண் பொருட்களை பிரித்தெடுக் கும் இயந்திரங்கள் ஆகியவற்றிற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. உரங்களுக்கு அய்ந்து சதவீதமும் பூச்சிக்கொல்லிகளுக்கு 15 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.உரங்களுக்கான மானியம் 13 சதவீதத் திலிருந்து குறைக்கப் பட்டு விட்டது. வேளாண்துறைக்கான ஒதுக்கீடு 2.67 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு; ஆனால் இந்த அரசு விவசாயத் துறை மீது கவனம் செலுத்தவில்லை. உலகளாவிய பொருளாதார நெருக்கடி 2008 (GFC- Global Financial Crisis) அதைப் பற்றி இந்த நேரத்தில் பேசுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். நீங்கள் கூட அதைப் பற்றி வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
ஒட்டுமொத்த உலகமும் அய்ரோப்பிய நாடுகளும் முடங்கிப் போனபோது அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP Gross domestic Production) 0.8 சதவீதமாக இருந்தது. இங்கிலாந்தின் ஜி.டி.பி. 1.7 சதவீதமாகவும், ஜெர்மனியின் ஜி.டி.பி. 1 சதவீதமாகவும் , ஜப்பானின் ஜி.டி.பி. 1.5 சதவீதமாகவும், பிரான்ஸின் ஜி.டி.பி. 1.4 சதவீதமாகவும் , கனடாவின் ஜி.டி.பி. 1.9 சதவீதமாகவும் இருந்த அந்த நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியாவின் ஜி.டி.பி. 8 சதவீதமாக இருந்தது. அது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் முதன் முறையாக இருந்தபோது, இந்த பொருளாதார நெருக்கடியில் இந்தியா நிலைத்திருந்ததற்கு காரணம் அன்றைக்கு வேளாண் துறை, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சிறு குறு தொழில்கள் துறை. ஆனால் இன்றைக்கு இந்த மூன்று துறைகளுமே ஒடுக்கப்படுகின்றன. லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன. சிறு குறு தொழில்கள் துறை ஜி.டி.பி.யில் 29 சதவீத பங்கு வகித்தது. பத்து கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தது. 45 சதவீதம் ஏற்றுமதி அளித்தது. ஆனால் இந்தத் துறை இன்று கவனிப்பாரற்று கிடக்கிறது.
அடுத்ததாக வேலைவாய்ப்பின்மை. ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள் – அது அனைவருக்கும் தெரியும். ஆனால் அப்படி இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இல்லை – வேலை கொடுக்கவும் இல்லை. 2012 இல் வேலை வாய்ப்பின்மை ஒரு கோடியாக இருந்தது. ஆனால் அது தற்போது நான்கு கோடியாக உயர்ந்திருக்கிறது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் விவசாயம் சாராத வேலை வாய்ப்புகள் 79 லட்சம் உருவாக்கப்பட்டது. ஆனால் அது தற்போது 25 லட்சமாக குறைந்துவிட்டது.
வேலையில்லாத் திண்டாட்டம்!
நம்முடைய நாட்டில் மூன்றில் ஒருவர் வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார். ஓர் ஆண்டில் இரண்டு பேர் வேலை இல்லாமல் தற்கொலை செய்திருக்கிறார்கள். ஒன்றிய அரசு அலுவலகங்களில் 75 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ( அவைத் துணைத் தலைவர் மணி ஒலிக்கிறார். இது முக்கியத்துவம் வாய்ந்த விவாதம். நேரத்தைக் காட்டி எங்களது குரல் வளையை மீண்டும் நெரிக்கிறீர்கள் என்று திருச்சி சிவா பதில் உரைக்க, திருச்சி சிவா அவர்களே நீங்கள் இந்த அவையில் மிக மூத்த உறுப்பினர், 1:30 மணி நேரம்தான் இந்த விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேரத்தை புரிந்து கொள்ளுங்கள் என்று அவைத் துணைத்தலைவர் சொல்ல, ஏன் குறுகிய நேர விவாதமாக எடுத்துக் கொண்டீர்கள் என்று திருச்சி சிவா கேட்க, சரி பேச்சை தொடருங்கள் ஒரு நிமிடம் அனுமதிக்கி றேன் என்று அவையின் துணைத் தலைவர் சொல்கிறார்). நிறைய நேரம் ஒதுக்குங்கள். இங்குள்ள அனைவரையும் அவர்களது கருத்துகளை தெளிவாக எடுத்துரைக்க விடுங்கள். நேரம் கொடுங்கள் எங்களது கருத்துகளை கேளுங்கள். நாடு முழுவதும் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆனால் அவற்றை இன்னும் நிரப்பவில்லை. இதுதான் இன்றைக்கு நாட்டின் நிலைமை. இந்திய ரயில்வே துறையில் 2023இல் 17 லட்சம் பணியிடங்கள் 11 லட்சம் பணியிடமாக குறைக்கப்பட் டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங் களில் பணியிடங்கள் 17.3 லட்சத்திலிருந்து 14.6 லட்சமாக குறைக்கப்பட்டு விட்டது. பணி பாதுகாப்பில்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை யும் 17.2 லட்சத்திலிருந்து 2 மடங்காக அதிகரித்து விட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுகிறது. விவசாயத்துறை யில் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கப்படுகிறது.
வெளிநடப்பு
2023 டிசம்பரில் தமிழ்நாடு மிக மோசமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் தமிழ்நாடு அரசு நிவாரணம் கோரியது.தமிழ்நாட்டின் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார் பய னில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச் சரை சந்தித்தார் கள் பயனில்லை. ராஜ்நாத்சிங் வந்து பார்வை யிட்டு சென்றார் பயனில்லை . நாங்கள் பலமுறை கேட்டுப் பார்த்தோம் கொடுக்கவில்லை.
அதை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறோம்!
இவ்வாறு அறிவித்த பின் மாநிலங்களவை தி.மு.க. உறுப் பினர்கள் அனைவரும் குழுத்தலைவர் திருச்சி சிவா தலை மையில் வெளிநடப்பு செய்தனர்.