மாநில அரசுக்குத் தடை போடும் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் தமிழர் தலைவர் பங்கேற்றார்

Viduthalai
4 Min Read

 10 லட்சம் மக்களுக்கு 100 பேர் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டுமாம்!

அரசியல்

சென்னை, அக். 9- 10 லட்சம் மக்களுக்கு 100 பேர் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஒன்றிய பிஜேபி அரசின் அபாய அறிவிப்பை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் இன்று (9.10.2023) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தலைவர் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்.

“தேசிய மருத்துவ ஆணையம் புதிய வழிகாட்டு முறை” என்ற பெயரில் ஓர் அபாய அறிவிப்பை ஒன்றிய அரசிதழில் ஆகஸ்ட் 16ஆம் நாள் வெளியிட்டுள்ளது.

அதில் இளநிலை மருத்துவக் கல்விக்கான தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் இந்த விதிமுறைகள் தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களையே பாதிக்கும்.

10 ஆண்டுகளுக்கு 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7. 23 கோடி ஆகும். 2021ஆம் ஆண்டில் இது 7.64 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப் பட்டிருக்கிறது.

இந்த மக்கள் தொகைக்கு தமிழ்நாட்டில் அதிக அளவாக 7,640 மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. அதனால், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது. அதுமட்டுமின்றி, இப் போது இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங் களையும் ஏற்படுத்த முடியாது. உலகில் மக்கள் தொகைக்கு இணையாக அதிக மருத்துவர்க ளைக் கொண்ட நாடு கியூபா தான். 2019ஆம் ஆண்டு கணக் கெடுப்பின்படி அங்கு 110 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார்.

கத்தார் நாட்டில் 125 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். அதற்காக அந்த நாடுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக் கத் தடை விதிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருப் பதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்லூரி களுக்கு தடை விதிப்பது அநீதி. மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கலாமா, வேண்டாமா? என்ப தைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குத் தான் உண்டு. தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது.

எனவே ஒன்றிய அரசின் இந்தப் போக்கை கண்டித்தும், மாநில  அரசுகள் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்! என் பதை வலியுறுத்தியும் இன்று (9.10.2023) தமிழ்நாடெங்கும் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் தமிழர் தலைவர் பங்கேற்பு

10 லட்சம் மக்களுக்கு 100 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டும் என மாநில அரசுக்குத் தடை போடும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து  இன்று (9.10.2023) காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு தலை மைக் கழகப் பொறுப்பாளர்கள் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலா ளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம், தே.செ.கோபால், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாவட்டத் தலைவர்கள்: எண்ணூர் வெ.மு. மோகன், ஆவடி வெ.கார்வேந்தன், புழல் த.ஆனந்தன், மாவட்டச் செயலாளர்கள்: சு.அன்புச்செல்வன், தே.ஒளிவண் ணன், செ.ர.பார்த்தசாரதி, அ.விஜய் உத்தமன்ராஜ், கோ.நாத்தி கன், ஜெ.பாஸ்கரன், க.இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஆர்ப்பாட்ட விளக்க தொடக்கவுரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று கண்டன உரை நிகழ்த்தினார். நிறைவாக தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் 

ஆ.வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியே அரசே! ஒன்றிய அரசே! பறிக்காதே பறிக்காதே! தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்காதே!

தடை செய்யாதே தடை செய்யாதே! மருத்துவக் கல்வி வளர்ச்சியைத் தடை செய்யாதே!

கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம்! தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லுரிகள் திறப்பதற்கு தடை விதிக்கும் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டிக்கின்றோம்!

பழிவாங்காதே பழிவாங்காதே! தமிழ்நாட்டு மக்களைப் பழிவாங்காதே! ஒன்றிய பிஜேபி அரசே பழிவாங்காதே! மோடி அரசே பழிவாங்காதே! போன்ற ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *