“ராகுல் காந்தி பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்

viduthalai
1 Min Read

புதுடில்லி,ஜன.25- அசாமில் பாரத ஒற்றுமை நியாய நடைப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாது காப்பை உறுதி செய்யுமாறு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவருக்கு கார்கே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
நேற்று (24.1.2024) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே எழுதியுள்ள கடிதத் தில், “அசாம் காவல்துறையினர் தொடர்ச்சியாக ராகுல் காந்தியின் பாதுகாப்பு வளையத்தை பாஜக தொண்டர்கள் உடைத்து நெருங்க அனுமதிக்கின்றனர் அல்லது மீறல்களை கண்டு கொள்ளாமல் துணை நிற்கின்றனர். ராகுலுக்கும் அவருடைய குழுவினரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர்.
அசாமில் நடைப் பயணத்தில் முதல் நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் பல்வேறு இடையூறுகள் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துனை இடையூறுகளுக்கு மத்தியிலும் ராகுல் காந்தி திட்டமிட்டபடி நடை பயணத்தில் மேற்கொண்டுள்ளார். அதனால் நீங்கள் தலையிட்டு அசாம் முதலமைச்சரும், காவல்துறை தலைமை இயக்குநரும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும். ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து ராகுல் காந்திக்கு தனிப் பட்ட முறையில் பெரிய பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் இதில் தலையிட்டு அவருடைய, நடைப் பயணத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *