கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

viduthalai
2 Min Read

18.1.2024

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
♦ நாகாலாந்து மக்கள் பிரச்சினைகளை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் மோடி அரசு தீர்க்கவில்லை; நாட்டின் கலாச்சாரங்கள், மதங்கள் மீது தாக்குதல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும், பல்வேறு பாரம்பரியங்கள், உணவு, மத பழக்க வழக்கங்களை அவமதிக்கின்றன என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
♦ 14 – 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களில் நான்கில் ஒரு மாணவனால் இரண்டாம் வகுப்பு பாடத்தைக் கூட சரிவர படிக்க முடியவில்லை; 43 சதவீத மாணவர்களுக்கு ஆங்கில வார்த்தைகளை சரி வர உச்சரிக்க தெரியவில்லை என ஆசர் ஆய்வு அறிக்கையில் தகவல்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை
♦ ‘ஸ்டார்ட் அப்’ தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தர நிலையில் இருந்த தமிழ்நாடு, நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தர வரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
♦ அயோத்தி கோவில் குடமுழக்கில் பிரதமர், உத்திரப்பிரதேச முதலமைச்சர் பங்கேற்பதற்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மத விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது, அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என இன்னொரு மனுவும் தாக்கல்.

தி டெலிகிராப்
♦ பாலின உணர்திறன், சம உரிமைகள், அறிவியல் மனப்பான்மை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாளும் போக்சோ சட்டத்தின் விழிப்புணர்வு ஆகியவற்றைத் தவிர, ஒவ்வொரு பாடப் புத்தகத்திலும் அரசமைப்பின் முன்னுரையை உள்ளடக்கியதன் மூலம் கேரள அரசு பள்ளிப் பாடத் திட்டத்தில் விரிவான திருத்தம் செய்துள்ளது. மாநில கல்வித் துறை புதிய பாடத் திட்டத்திற்கு ஏற்ப 173 பாடப் புத்தகங்களைத் திருத்தியுள்ளது.
♦ சி.பி.எம். பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘இந்து ராட்டிரத்தை’ கட்டமைக்கும் ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜோதிபாசுவின் நினைவு நாளில், இடது சாரித் தலைவர்கள் மதச்சார்பற்ற கொள்கைகளை நினைவு கூர்ந்தனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா
♦ ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள ராமன் கோவில் குடமுழக்கு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பை ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு யாதவ் நிராகரித்துள்ளார். முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் அயோத்தியில் ராமன் கோவில் குடமுழக்கு விழாவில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்துள்ளார்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *