இந்தியாவில் 24 மணி நேரத்தில் 761 பேருக்கு கரோனா

viduthalai
3 Min Read

புதுடில்லி, ஜன. 6- ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று (5.1.2023) காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து தற்போது 4,334 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 24 மணி நேரத்தில் 4 பேர் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். தவிர கரோனா திரிபான ஜேஎன்.1 தொற்றுக்கு இதுவரை 541 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அவர் களில் பாதிக்கும் மேற்பட்டோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவில் 2020 முதல் இதுவரை தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 78,885 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220.67 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை தொடங்குகிறது
‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’
சென்னை, ஜன. 6- சென்னையில் நாளையும் – நாளை மறு நாளும் (7 மற்றும் 8–ஆம் தேதிகளில்) நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடை பெறுகிறது. இம்மாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு, டென்மார்க், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரே லியா உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள் ளனர். இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டிற்கு அய்ந்தரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகளை ஈர்க்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் 7-ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்குகிறது. தமிழ் நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற் புரை ஆற்றுகிறார். அதன்பின், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள்உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

ஒன்றிய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் தொழில்கள் அடிப்படையிலான பல்வேறு தனித்தனி அமர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜவுளி, காலணி தொழில்கள், மின்சார வாகனங்கள், வேளாண் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் 2 நாட்களும் நடத்தப்பட உள்ளன.
உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்க விழாவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒளிபரப்ப மாவட்ட ஆட்சியர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் இரண்டாம் நாளான ஜனவரி 8-ஆம் தேதி பல்வேறு நாடுகளின் தொழில்நிறுவனங்கள் தமிழ் நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத் திட உள்ளன. சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி மய்யம் மூலம் மேற்கொள்ளப் படுகின்றன. இதனைத் தொடர்ந்து அன்று மாலை 4.30 மணிக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவுரை ஆற்றுகிறார்.

வீழ்ச்சியா! வளர்ச்சியா?
சிபிஎம் மார்க்ஸிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி
பெங்களூரு, ஜன. 6- 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் உற்பத்தி துறைகளில் உற்பத்தி 2023 டிசம்பரில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று உற்பத்தி துறை சார்ந்த ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருட்கள் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை களும் கடுமையாக அதிகரித்துள்ளதாக தொழிற்துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. ஆனால் வழக்கமான மோடி அரசு புள்ளி விவரங்களை திரித்து வெளியிடுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும் என்று முற்றிலும் பொய்யான விபரங்களை முன் வைத்து வழக்கமான படாடோப பிரச்சாரத்தில் ஈடு பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி வீழ்ச்சி என்பது பொருளாதார மீட்சி வெகுதூரத்தில் உள்ளது என்பதையே காட்டுகிறது. உற்பத்தி வீழ்ந்தாலும் மோடியின் கூட்டுக் களவாணிகளது லாபம் வீழவில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *