பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன்
கவிப்பேரரசு வைரமுத்துவின் 39 ஆவது படைப்பு 2024 புத்தாண்டின் முதல் நாளில் வெளிவந்துவிட்டது.
‘மகா கவிதை’ – புவியைக் காக்க தமிழ்நாட்டிலிருந்து ஓங்கி ஒலித்திருக்கும் உலக இலக்கியம் ‘.
படைப்பாளன் பெருங்கவிஞன்;
இலக்கிய வடிவங்கள் அத்தனையிலும் வித்தகன்;
சமூக அக்கறை மிக்கவன்;
இயற்கையின் காதலன்;
வான் புகழ் கொண்டவன்.
பஞ்சபூதங்களின் தகவல்களை – ரகசியங்களை – அறிவியல் செய்திகளைச் சுருக்கமாகவும் சொல்ல வேண்டும்; சுவையாகவும் செப்ப வேண்டும்.
‘ நுவல் பொருள் பெரிதினும் பெரிது.’
பால் வெளி அகலம் ஒரு லட்சத்து இருபதாயிரம் ஒளி ஆண்டுகள். வரலாற்றின் நீளம் 450 கோடி ஆண்டுகள். பரந்த களம். எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. சலிக்காத தகவல்களைச் சலித்து சலித்து தர வேண்டும். பாடப் புத்தகமாக இல்லாமல் பேரிலக்கியமாய் ஒளிர வேண்டும். படைப்பாளன் கவிதை வடிவத்தைத் தேர்வு செய்தான். பேசு பொருளும் கவிதை வடிவும் முதல் வெற்றி.
எழுதத் தொடங்கினால் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குக் கற்பனையும் உணர்ச்சியும் பேரருவியாய் கொட்டும்;
ஆற்றல்மிக்க சொற்கள் முண்டியடிக்கும்;
கவித்துவம் கரை புரளும்;
ஓசை இன்பம் செவியில் தேன் பாய்ச்சும்;
எதுகை, மோனைகள் கைகட்டி சேவகம் செய்யும்.
அறிவியல் செய்திகள் அணிவகுக்கும் படைப்பில் மெய் ஒன்றே மொய்த்துக் கிடக்க வேண்டும் என்று கட்டுப்படுத்திக் கொண்டு காப்பியம் படைத்தார். பூக்காரி வீட்டில் மலர் வாசம் போமோ ?
ஒரு மணி நேரம் வகுப்பு நடத்த மூன்று மணி நேரம் செலவழித்துத் தகவல் திரட்டும் பேராசிரியர் போல் 300 பக்கங்கள் கொண்ட இலக்கியம் படைக்க முப்பது மாதங்கள் தேனீயாய் வினையாற்றியிருக்கிறார்.
“யாவருக்கும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள்” என்று கூறிய தந்தை பெரியார், “அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் மூன்றும் இருப்பதே இலக்கியம்” என்று இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்தார்.
தந்தை பெரியாரின் விருப்பத்தைக் கவிப்பேரரசு வைரமுத்து நிறைவு செய்திருக்கிறார்.
தமிழை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்.
அறிவியல் தமிழை வளர்த்திருக்கிறார்.
அறிவு செழிக்க இலக்கியம் வடித்திருக்கிறார்.
உலகப் போட்டிக்கு தமிழைத் தயாரித்திருக்கிறார்.
மகாகவிதை – நிலம், நீர், தீ, வளி, வெளி எனும் அய்ம்பூதங்களைப் பற்றிய புத்தகம்.
அறிவியல் உண்மைகளை தமிழ் அழகியலோடு கலந்து தந்த விருந்து.
பூமியின் பெருமைகளைப் பட்டியலிட்டுப் பாராட்டும் சலவை சாசனம்.
மானுடப் பிழைகளைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கும் அற ஆசான்.
அறிவியலை கவிதை படுத்தியிருக்கிறார்.
அறிவியல் உண்மையும் கவிதைத் தன்மையும் புத்தகம் முழுவதும் முத்தமிட்டுக் கொள்கின்றன; அத்தனையும் காதலியின் முதல் முத்தம் போல் தித்திக்கின்றன.
‘மகா கவிதை’ பொழுதுபோக்கு புத்தகம் அல்ல; அரிய அறிவியல் செய்திகளை – ஆழமான சிந்தனைகளை இதயத்தில் பதித்துவிட்டுப் போகிறது. பலமுறை படிக்க வேண்டிய பயனுறு பனுவல்.
அரிய தகவல்களுக்காக ஒரு முறை படிக்கலாம்;
வசீகரிக்கும் நடைக்காக இரண்டாம் முறை படிக்கலாம்;
பூமியின் மீது கொண்ட காதலுக்காக மூன்றாம் முறை படிக்கலாம்;
புத்தகம் எழுப்பும் கனமான வினாக்களுக்கு விடையறியும் நோக்கத்திற்காக நான்காம் முறை படிக்கலாம்;
பிரபஞ்ச ஆச்சரியங்களை அள்ளிப் பருக அய்ந்தாம் முறை படிக்கலாம்;
வளர்ந்த நாடுகளின் சுயநலம் அறிய ஆறாம் முறை படிக்கலாம்;
தீது சூழ்ந்தாலும் மனிதன் வெல்லுவான் எனும் நம்பிக்கை கீற்று நெஞ்சில் நிலைக்க ஏழாம் முறை படிக்கலாம்;
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுவது இலக்கியத்தின் இயல்பன்றோ!
செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட படம் அட்டையை அலங்கரிக்கிறது. விதிப்படி சுற்றும் கோளல்ல மனிதன்; விதிகளைக் கடப்பான்; தடைகளைத் தகர்ப்பான்; பூமியைக் காப்பான் என்னும் தன்னம்பிக்கையை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறது.
புத்தகத்தின் தொடக்கத்தில் கவிப்பேரரசு எழுதும் முன்னுரை ஆய்வுரை என்றே கொண்டாடலாம். ‘ஆயிரம் பாடல்கள்’ புத்தகத்திலும், ‘மூன்றாம் உலகப்போர்’ புதினத்திலும், ‘தமிழாற்றுப்படை’ நூலிலும் எழுதப்பட்ட முன்னுரைகள் அறிஞர்கள் உலகில் ஆராதிக்கப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றதை யாவரும் அறிவர். ‘மகா கவிதை’ நூலின் முன்னுரை புத்தகத்தின் உள்ளடக்கத்தை சுருக்கி உரைக்கும் சூத்திரமாகத் திகழ்கிறது.
பஞ்சபூதங்களில்,
நிலம் 54 பக்கங்கள்
நீர் 54 பக்கங்கள்
தீ 50 பக்கங்கள்
வளி 57 பக்கங்கள்
வெளி 53 பக்கங்கள்
ஒவ்வொரு பக்கத்திலும் தகவல்களும் கவித்துவமும் கலைநயமாய் மிளிர்கின்றன;
பூமியின் மீது கொண்ட நேசமும், மக்கள் கூட்டத்தின் மீது கொண்ட பெருங்காதலும் வெளிப்படுகின்றன;
குற்றங்களை இடித்துரைக்கிறார்; தாயுள்ளத்தோடுத் தீர்வுகளைத் தருகிறார்.
பால்வெளியில் இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களாய் “மகா கவிதை” நூலில் அறிவியல் தகவல்கள்.
பூமியின் பொறுமை, உயிர்த் தோற்றம், நைட்ரஜனின் சுழற்சி அறியலாம்.
பூமியின் சாய்மானம், பூமிக்கு நேர்ந்த அய்ந்து முற்றழிவுகள், பூமியில் இருக்கும் நீரின் அளவு குறித்து ‘சின்னக் கணக்கு ‘ என ஓர் அதிர்ச்சி கணக்கு நம்மைத் திடுக்கிட வைக்கிறது.
பால்வெளியில் நமது குடும்பத்தின் இருப்பைக் காட்சியாக்கி காட்டுவதில் இருக்கிறது கொள்ளையழகு.
“இருபதாயிரம் கோடி
அரிசி காயும் களத்தில்
ஓரத்தில் ஊர்வலம் போகும்
ஒன்பது எறும்புகள்போல்
நமது சூரியக் குடும்பம் ”
அடடா!
“பரவிக் கிடக்கும் காற்றின் உயரம் பத்தொன்பது கிலோமீட்டர்” ஓ…
“வேர் கொண்ட உயிர்க்கெல்லாம்
கரியமில வாயு;
கால் கொண்ட உயிர்க்கெல்லாம்
உயிர் வளி”
எத்தனை பெரிய உண்மை.
“ஒரு நாளில் ஒரு மனிதன் உண்ணும் உணவு ஒன்றரை கிலோ;
உறிஞ்சும் நீர் இரண்டு கிலோ;
உள்ளிழுக்கும் காற்று ஒன்பது கிலோ”
அறிவியல் புத்தகத்தை ரசித்து ரசித்து வாசிக்க முடியுமா? சொக்க வைக்கும் சொல்லாட்சியில் சுவைத்துச் சுவைத்துப் படிக்க வைக்கிறார் வைரமுத்து.
“உப்பு மூட்டைகளைத்
திருடிக்கொண்டு
முத்து மூட்டைகளை
விட்டெறியும்
பிழைக்கத் தெரியாத
பூதம் போல்
கடல் நீரைக் களவாடி
அமிர்த தாரைகளை
அள்ளி எறியும் ஆகாயம்” என்கிறார்.
சூரியனின் ஈர்ப்புச் சக்தியை இப்படியும் சொல்ல முடியுமா ? வியப்பிலாழ்த்துகிறார் வைரமுத்து.
“கண்கள்
காதலைத் தொட்டு வைக்க…
காதல்
மனங்களைக் கட்டி வைக்க…
மனங்கள்
உடல்களை ஒட்டி வைக்க…
உடல்கள்
உயிர்களைப் பெற்று வைக்க…
உயிர்கள்
குடும்பங்கள் கூட்டி வைக்க…
குடும்பம்
சமூகம் தோற்றுவித்தது போல் –
பூமி உயிர்களை
கோள்கள் ஒன்றையொன்றை
சூரியன் பூமியை
பால்வீதி சூரியனை
அண்டத் திரட்டு பால்வீதியை
ஈர்த்து வைக்க
ஈர்ப்பின் அச்சாணியில்
இயங்கும் இந்தப் பேரண்டம்”
பாடத்திட்டம் இப்படி இருந்தால் மக்கு மாணவனும் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பான்.
” தாகமென்றவன் கையில்
கடல் கொடுப்பவனும்
விளக்கென்றவன் கையில்
சூரியன் கொடுப்பவனும்
அறம் கடந்த அறிவிலிகள்
மற்றும்
துன்ப இன்பிகள் ”
காற்றைச் சொல்லுகிறார் :
“ஒரே பொழுதில்
உலகுக்கே பரிமாறும்
பந்தி அமுதம் ”
‘துன்பத்தில் இன்பம் எப்போது?’ என்ற வினாவிற்கு காற்று சொல்லும் விடை :
“பிள்ளைகளின் பலூன்களில்
சிறைவாசம் செய்யும்போது”
பாயாசத்து முந்திரிகளாய் உவமைகள் – உருவகங்கள் இடம் பெறுகின்றன.
“குன்றுகள் கோலிக்குண்டுகளெனில்
பள்ளத்தாக்குகள் பல்லாங்குழிகள் ”
தண்ணீரைத் “திரவத் தங்கம்” என்கிறார்.
உலக வரைபடத்தை இப்படியும் சொல்லலாம் என்பதை இப்போது கண்டு கொண்டோம்.
“புளிய விதைக் கூட்டம்
பம்பரக் குத்தால்
சிதறுவது போல
சில்லு சில்லாய்ச் சிதறிக்
கண்டபடி கிடக்கிறது
கண்டத் தட்டு”
வியாழன் குறித்த தகவல்கள் அறியும்போது, ‘ குருபகவான் ‘ நிலை பாவம்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.
” பேரரசு
கட்டியெழுப்பும் பேராசையோடு
சமருக்குச் செல்லும் வழியில்
சாமியாராகிப் போன
சக்கரவர்த்தியைப்போல
நட்சத்திரமாக முயன்று
பாதி வழியில் கிரகமாகிப்போன
வியாழன்
சூரியனைக் கெஞ்சித்தான்
விளக்குப்போட்டுக் கொள்கிறது
வீட்டுக்கு ”
அறிவியல் இலக்கியத்தில் நகைச்சுவைக்கு இடமுண்டா? கேள்வி பிறப்பது இயல்பு.
கவிஞர் இருக்கும் இடத்தில் கலகலப்பு கொடிகட்டிப் பறக்கும். நகைச்சுவை தெறித்துக்கொண்டேயிருக்கும்.
வெடிச்சிரிப்பு ஓசை ஒலித்துக்கொண்டேயிருக்கும்.
‘ மகாகவிதை ‘ புத்தகத்தில் சில வரிகள்.
“கோள் சொல்லவில்லை தாயே
ஆனாலும்,
கோள் குறித்துச் சொல்லுகிறேன்”
“வள்ளுவ ஞானியும்
கடவுள் வாழ்த்தருகே
வான் சிறப்பு வைத்தனன் ஏன் ?
முதல் அதிகாரம் கிழிந்துபடில்
மழையே கடவுளாகும்
சகல சாத்தியம் கருதித்தான்”
கொளுத்தும் வெயிலில், கசகசக்கும் வேர்வையில், புழுங்கித் தவிக்கும் போது, வீசும் காற்றின் சுகத்திற்கு மாற்று ஏதுமில்லை. காற்று சொல்கிறதாம் :
“வெயில் நேரம் தொலைந்து போவேன்”.
“ஒரு நாளில் ஒரு மனிதன் இருபத்தொரு சுருட்டுப் பிடிக்கலாம் அல்லது பீகிங் தெருவில் முன்னும் பின்னும் போய் வரலாம்”
“அண்டம் விட்டு அண்டம் பேசும்
அண்டை வீட்டுக் கதை எதற்கு?
குடும்பக் கதை பேசுவோம்
சூரியக் குடும்பக் கதை”
‘ மகா கவிதை ‘ வரிகள் நம்மை சிந்தனையில் ஆழ்த்திவிடுகின்றன.
“ஈர்த்தலின்
ருசியும் விசையும் அறிந்தால்
அண்டம் மானுடம் இரண்டுக்கும்
ஆதார சுருதி
அதுவென்று தெளிவாய்”
“ஈன்று புறந்தந்த பிள்ளைகளுக்குச்
சூரியனைப் போலவே
சுற்றித் திரியும்
சுதந்திரம் கொடுங்கள்
சுயமாய் வாழும்
சுழல் விசை கொடுங்கள்
தூரம் நின்று
கண்காணியுங்கள்”
“பூமி கடந்தவன் சொல்வான்
சொர்க்கம்
பூமிதான் என்று”
‘மகா கவிதை’ நூல், நிலம், நீர், காற்று மாசுபடுவதை வேதனையோடு வெளிப்படுத்துகிறது. மானுடம் எதிர்கொள்ளவிருக்கும் அவலத்தைக் கவலையுடன் சுட்டிக் காட்டுகிறது. பூமியைக் காப்பாற்ற வேண்டுகோள் விடுக்கிறது.
படைப்பாளன் தம் படைப்பில் சமூகத்தைப் படம் பிடிப்பதோடு சமூகத்திற்கு அறங்களை அறிவுறுத்துவான். கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துவான். அடைய வேண்டிய இலக்கு நோக்கி வழி நடத்தவும் செய்வான். அதைத்தான் காலந்தோறும் படைப்பாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். கவிப்பேரரசு வைரமுத்து மானுடத்தின் தலையில் குட்டி அறிவுறுத்துகிறார்.
“நிகழ்கால மனிதா!
நீ கால்நடையாய் வந்த
ஒரு பயணி
பூமியை
நீ நுகர முடிவது
அய்ம்புலன் அளவுக்குத்தான்
நுகர்ந்தாயா
போ… போய்விடு
வாழும் உயிர்கட்கும்
வந்து கொண்டிருக்கும்
பயணிகட்கும் வழி விடு
மண் கண்டம் சொந்தமென்று
மமதை கொள்ளாதே”
என்னே அர்த்தச்செறிவான அறிவுறுத்தல்.
மாசுற்ற காற்று பேசுகிறது.நம் நெஞ்சம் நடுங்குகிறது.
“மாசு விளைந்தது. காடு கதறியது. கோடரிகளின் கொலை ஓசையில் மலை நடுங்கியது. கடைசிக் காலம் இதுவென்று பொத்துப் பொத்தென்று செத்து விழுந்தன பறவைகள்.
அணுகுண்டுக்குள் திணித்தான்
மனிதன் தன் திமிரை
அகந்தையின் அழுக்கை வெடித்து
ஆகாயம் கருப்படித்தான்
அமிலதாரை வீச்சுக்களால்
வேதிப்பொருள் எச்சங்களால்
என் முகத்தில் கருஞ் சுருக்கங்கள்
ஆங்காங்கே துளைகள்”
படிக்க படிக்க பதறுகிறது நெஞ்சம்.
“எந்திரப் புகையைக் காற்றின் முகத்தில் ஊதாதொழிக” என்றுரைக்கும் கவிஞர், ‘ காற்றை மாசுறுத்த மாட்டோம்’ என்று சபதம் ஏற்கச் சொல்கிறார். காடு வளர்க்கக் கட்டளை இடுகிறார்.
நம்பிக்கையை விதைப்பதே படைப்பாளனின் முதன்மைப் பணி. கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார்:
“மரணம் கிடக்கட்டும் மரணம்
அதுவரை
வாழ்வைக் கொண்டாடுவோம்
சூரியனே
அலைகளால்
கொண்டாடிக் கொள்ளும் கடலும்
பறவைகளால் கொண்டாடிக் கொள்ளும் காடும்
இடி மின்னலால்
கொண்டாடிக் கொள்ளும் வானமும்
மனிதர்களால்
கொண்டாடிக் கொள்ளும் மண்ணும்
நீ
இருக்கும் வரை இருக்கும்
ஆதலால்
மரணத்தை
முதுகுக்குப் பின்னால்
எறிந்து விட்டு
மார்புக்கு முன்னால்
வாழப் பார்ப்போம் வாழ்வை”
என்று நம்பிக்கை உரைத்து உற்சாகம் கொள்ள வைக்கிறார்.
“சந்திர சூரியர்கள் கண்கள்
மழிக்க விரும்பாத தாடிகள் தாவரங்கள்
வளிமண்டலம் நுரையீரல்
கடல் நீலரத்தம்
ஒரு போதும் உலகை இழக்க மாட்டோம்
என்ற குழுவோசை எட்டும்வரை எட்டட்டும்
எட்டுக் கோள்களை”
என்று சங்க நாதம் செய்யும் கவிப்பேரரசு, “நீர்க் குடமாகிய பூமியைக் கர்ப்பக் குடத்துக் குழந்தை போல் தடவித் தடவி நலம் காப்போம்” என்கிறார். ‘ மகாகவிதை ‘ மகத்தான படைப்பு.
கவிப்பேரரசு வைரமுத்துவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கட்டும்; ஞாலம் காக்கும் படைப்புக்கு நோபல் பரிசு கிடைக்கட்டும்.
தொல்காப்பியர் ஒரே ஒப்பீட்டு உவமைக்காக உலகத்தோற்றத்தைஆய்வுசெய்து 1589-வதுநூற்பாவில் பதிவுசெய்ததை அவரது
2733-வது வயதில் அவரதுமரபுவழித்தோன்றலான வைகை&வடுகைவைரமுத்து அவர்கள் 300பக்கங்களுக்கும்மேல் அறிவியல் நூலாகக்கொணர்ந்துள்ளது வரவேற்கக்கூடியதாகும்.நம்கருத்தை நம்சீனிவாசன்எதிரொலித்துள்ளது மகிழ்வளிக்கிறது.