– கருஞ்சட்டை –
900 கோடி ரூபாய் செலவில் அயோத்தியில் ராமன் கோவில்! முற்றுமாகப் பணிகள் முடிந்து விடவில்லை. ஆனாலும், அவசர அவசர மாகத் திறப்பு விழா மட்டும் இம்மாதம் 22 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. காரணம் தெரிந்ததே – மக்களவைத் தேர்தல் வருகிறதே!
ஆதாயமில்லாமலா ஆத்துத் தண்ணீரை இறைப்பார்கள்?
திறப்பாளர் வேறு யாராக இருக்க முடியும்?
ஓர் இரயிலை வெள்ளோட்டம் விடக்கூட ‘நான்தான், நான்தான்!’ என்று முந்திக்கொண்டு பச்சைக் கொடி அசைக்கும் நமது பிரதமர் விட்டுவிடுவாரா?
அவர்தான் திறப்பு விழா செய்கிறார். ஆகம விதிக்கு முரணாக அவர் எப்படி திறக்கலாம்? என்று ஒரு சங்கராச்சாரியார் குரல் கொடுத்திருக்கிறார் – அது எப்படியோ போகட்டும்!
உலகமே உற்றுப் பார்க்கவேண்டும் என்று ராமன் கோவில் திறப்பு விழாவை நடத்துவதில் சூரத்தனம் காட்டும் சமர்த்தர்கள் ஒரு முக்கிய இடத்தில் கோட்டை விட்டுவிட்டார்களே!
அழைப்பிதழ் – எவ்வளவு முக்கியமானது. ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் (சமஸ்கிருதத் தில் அச்சிட்டுள்ளார்களா என்ற தகவல் இல்லை) அழைப்பிதழ் உலகம் முழுவதும் சென்றுள்ளது.
ஆங்கில அழைப்பிதழில் ‘இன்விட் டேஷன்’ என்பதைக்கூட சரியாக எழுத்துப் பிழை இல்லாமல் வெளியிடத் துப்பு இல்லை!
ஏ, அப்பா! எவ்வளவுப் பெரிய அறி வாளிகள், சாஸ்திரிகள் – ஷர்மாக்கள் அந்த வட்டாரத்தில்!
இன்விட்டேஷன் என்பது எப்படி அச்சிடப்பட்டுள்ளது தெரியுமா?
INVITAION – எது விடுபட்டுள்ளது என்பது புரிகிறதா?
INVITATION என்பதில் உள்ள ‘ஜி’ யைக் காணோமே!
‘அட, ராமா! இது என்ன கூத்து!’
ரூ.900 கோடி செலவு செய்து ராமனுக்குக் கோவில் எழுப்பியிருக்கிறோம் – ‘T’ – எல்லாம் ஒரு பிரச்சினையா? ‘‘‘டி’ இல்லாட்டி என்ன குடியா மூழ்கிவிடும்” என்று கேட்டாலும் கேட்பார்கள்.
ஏனென்றால், அவாள் எல்லாம் தகுதி – திறமைக்குப் பெயர் போனவர்கள் ஆயிற்றே!
எப்படி எழுதினால் என்ன, ராமனுக்குத் தெரியவா போகிறது?