காசா போரில் உயிர் பலிகள் 21,000

viduthalai
2 Min Read

காசா,டிச.31 காசாவில் இஸ்ரேல் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில் அங்கு போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி நேற்றுடன் (30.12.2023) 13 வாரங்கள் ஆகிறது. ஹாமஸ் அமைப்பை அடியோடு ஒழிப்போம் என சூளுரைத்து போரை தொடங்கிய இஸ்ரேல் இரவு, பகல் பாராமல் வான் மற்றும் தரைவழியாக காசாவை தாக்கி வருகிறது. இதில் ஒட்டு மொத்த காசாவும் சின்னா பின்னமாகிக் கிடக்கிறது. ‘போரின் விளைவால் காசாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 85 சதவீதம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அய்.நா.வின் முகாம்கள், மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், வழிபாட்டிடங்கள் போன்றவற்றில் தஞ்சம் புகுந்துள்ளனர். அங்கு இடம் கிடைக்காத நபர்கள் சாலையோரங்களிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தற்காலிக குடில்களை அமைத்து சொந்த மண்ணி லேயே அகதிகளை போல் தங்கியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க போர் காரணமாக உணவு, குடிநீர் கிடைக்காமல் பல லட்சம் மக்கள் பட்டினியில் பரிதவித்து வருகின்றனர்.

எனவே மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என பன்னாட்டு சமூகம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவும் கூட போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது. ஆனால் இஸ்ரேல் இது எதையும் பொருட் படுத்தாமல் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக தரை வழித் தாக்குதலை இஸ்ரேல் விரிவுப் படுத்திக்கொண்டேசெல்கிறது. இஸ்ரேல் தரைவழியாக தனது படைகளை அனுப்புவதற்கு முன்பாக அந்த பகுதிகளில் சரமாரியாக குண்டுகளை வீசுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாகமத்திய காசாவில் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. குறிப்பாக அகதிகள் முகாம்கள், குடியிருப்புப் பகுதிகளில் உள்ளிட்ட இடங்களில் தீவிர தாக்குதல்கள் நடத்தப் பட்டு வருகின்றன.

இதன் காரணமாக மத்திய காசாவில் உள்ள மக்கள் உயி ருக்கு பயந்து அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வரு கின்றனர். அதே வேளையில் எங்கு சென்றாலும் மர ணம் காத்திருக்கிறது என்ற நிலையில் என் வீட்டிலேயே உயிர் போகட்டும் என கூறி ஒருதரப்பு மக்கள் தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில் மத்திய காசாவில் உள்ள நுசிராத் மற்றும் மகாசி அகதிகள் முகாம்கள் மீது நேற்று 28.12.2023 அன்று இரவு இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 35 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

அதேபோல் தெற்கு காசாவில் மருத் துவமனைக்கு அருகில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 20 பேர் கொல்லப் பட்டனர். இதனிடையே 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 187 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இதை தொடர்ந்து,போரில் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி போர் தொடங்கியதிலிருந்து தற்போது வரையில் 21,507 பேர் பலியாகி விட்டதாக காசா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் 55 ஆயிரத்துக்கும் அதிகமா னோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *