புதுடில்லி,டிச.15- நாடாளுமன்ற மக்களவைக்குள் 13.12.2023 அன்று பாதுகாப்பை மீறி இருவர் நுழைந்து புகை குண்டுகளை வீசிய நிகழ்வு குறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சம்பவம் நடந்தபோது நான் மக்களவையில்தான் இருந்தேன். ஒருவர் மேசை மீது ஏறி வந்தார். இன் னொருவர் பார்வையாளர் பகுதியில் இருந்து குதித்து வந்தார். கையில் இருந்த காலணியில் இருந்து எடுத்த மெட்டல் சிலிண்டரில் இருந்து மஞ்சள் நிற புகை வரச் செய்தார்கள். அதில் ஒரு வாசனையும் வந்தது. ஒரு நிமிடத்தில் மக்களவை முழுவதும் புகை பரவியது. மூச்சுவிட சிரமம் ஏற்பட்டது.
புதிய நாடாளுமன்றத்திற்கு வந்து இதுபோன்று ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. பார்வையாளர் பகுதியில் இருந்து யார் வேண்டுமானாலும் எளிதில் உள்ளே நுழைந்துவிடும் அளவுக்குத்தான் கட்டட அமைப்பு இருக்கிறது. பாதுகாப்பின்மைதான் காரணம்.
13.12.2023 அன்று நாடாளுமன்றத் தாக்குதல் தினம், எனவே பாதுகாப்பு அதிகமாக இருக்கும். அப்படி இருக்கும்போது எப்படி நுழைந்தார்கள் என்று தெரியவில்லை. பாதுகாப்பு அவ்வளவு மோசமாக உள்ளதைத்தான் காட்டுகிறது. எம்.பி.க்களே போட்டோ, அடையாள அட்டை காட்டி, இரண்டு நுழைவாயில்களைத் தாண்டிதான் உள்ளே செல்ல வேண்டும்.
பிரதமர் இருக்கக்கூடிய அவையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து நாங்கள் கேள்வி கேட்டால்கூட தேசப் பாதுகாப்புக்கு அச் சுறுத்தல், எதிரானவர்கள் என்று கூறுகின்றனர். நடந்த நிகழ்வுதான் தேசப் பாது காப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். இதற்குப் பதில் சொல்ல வேண்டும். யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலைதான் இருக்கிறது.
மதிய உணவு இடைவேளை நேரம் என்பதால் அந்த நேரத்தில் அதிகமான உறுப்பினர்கள் இல்லை. ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக நடந்திருந்தால் விளைவுகள் அதிகமானதாக இருந்திருக்கலாம்’ என்று பேசினார்.